காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்து வெளியிட்ட சமீபத்திய பதிவு அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவரது நார்வே பயணங்கள் மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளன.
மே 19ஆம் தேதி சமூக வலைதளத்தில் பதிவு வெளியிட்ட ராகுல் காந்தி, நார்வே பத்திரிகையாளர் ஹெல் லிங் வெளியிட்டிருந்த காணொளியை பகிர்ந்து, “மறைப்பதற்கு ஒன்றுமில்லை என்றால் பயப்படுவதற்கும் ஒன்றுமில்லை” என்று குறிப்பிட்டிருந்தார். மேலும், “சில கேள்விகளுக்குப் பதிலளிக்காமல் ஒரு பிரதமர் பதற்றத்துடன் விலகிச் செல்லும் காட்சியை உலகம் பார்க்கும்போது, இந்தியாவின் பிம்பத்திற்கு என்ன ஆகும்?” என்றும் கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்த பதிவுக்கு பதிலளித்த பத்திரிகையாளர் ஹெல் லிங், தொலைபேசி வாயிலான நேர்காணலுக்கு நேரம் கோரியதாக கூறினார். இதன் பின்னணியில், ராகுல் காந்தி கடந்த சில ஆண்டுகளில் நார்வேக்கு மேற்கொண்ட பல்வேறு பயணங்கள் மீண்டும் அரசியல் விவாதமாக மாறியுள்ளன. தகவல்களின்படி, ராகுல் காந்தி குறைந்தபட்சம் மூன்று முறை நார்வே சென்றுள்ளார்.
அந்தப் பயணங்களில் அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், சுற்றுச்சூழல் நிபுணர்கள் மற்றும் புலம்பெயர்ந்த இந்தியர்களுடன் அவர் கலந்துரையாடியதாக கூறப்படுகிறது. 2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற முதல் நார்வே பயணத்தின் போது, ட்ரோம்சோ, ஓஸ்லோ மற்றும் பெர்கன் உள்ளிட்ட நகரங்களுக்கு அவர் சென்றார். புதிய தொழில்நுட்பங்கள், காலநிலை மாற்றம், நிலையான போக்குவரத்து மற்றும் கார்பன் பிரித்தெடுப்பு தொடர்பான விவாதங்களில் பங்கேற்றதாக அப்போதைய தகவல்கள் தெரிவித்தன.
அதனைத் தொடர்ந்து 2018ஆம் ஆண்டு மீண்டும் நார்வே சென்ற ராகுல் காந்தி, அந்நாட்டின் பசுமைப் போக்குவரத்து திட்டங்கள் மற்றும் மின்சார வாகன பயன்பாட்டை ஆய்வு செய்ததாக கூறப்படுகிறது. ஹைட்ரஜன் எரிபொருள் தொழில்நுட்பம் தொடர்பாக நிபுணர்களுடன் அவர் ஆலோசனை நடத்தியதோடு, ஹைட்ரஜன் எரிபொருள் காரையும் இயக்கிப் பார்த்ததாக செய்திகள் வெளியாகியிருந்தன.
2023ஆம் ஆண்டு நடைபெற்ற ஐரோப்பிய சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாகவும் ராகுல் காந்தி ஓஸ்லோ சென்றிருந்தார். அப்போது அவர் ஓஸ்லோ பல்கலைக்கழகத்தில் உரையாற்றியதுடன், நார்வே முன்னாள் பிரதமர் எர்னா சோல்பர்க் உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்களையும் சந்தித்தார். புலம்பெயர்ந்த இந்தியர்களுடனும் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
அதே சுற்றுப்பயணத்தின் போது, மணிப்பூர் விவகாரம் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியத்தில் விவாதம் எழுந்திருந்த நிலையில், சில ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்களை ராகுல் காந்தி சந்தித்தது அரசியல் சர்ச்சையை கிளப்பியிருந்தது. இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் வெளிநாட்டு தலையீட்டை இந்தியா ஏற்க முடியாது என மத்திய அரசு அப்போது கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ராகுல் காந்தியின் இந்த வெளிநாட்டு பயணங்கள் குறித்து அரசியல் வட்டாரங்களில் தொடர்ந்து கேள்விகள் எழுந்து வரும் நிலையில், அவரது சமீபத்திய பதிவு மீண்டும் புதிய விவாதத்துக்கு வழிவகுத்துள்ளது.



