வீட்டில் யாரும் இல்லாமல், தனியாக இருந்த சிறுமிக்கு வட்டி பணம் வாங்க வந்த நபர் பாலியல் தொல்லை வழங்கியதால், மறைந்திருந்த பெற்றோர், அவரை கையும், களவுமாக பிடித்து, மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சென்னை அருகே உள்ள நெற்குன்றத்தைச் சேர்ந்த சுரேஷ் அந்தோணிராஜ்(37) என்பவர் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலை மேற்கொண்டு வருகிறார். இவர் சென்னை புறநகர் பகுதியில் கூலி தொழிலாளி ஒருவருக்கு வட்டிக்கு பணம் கொடுத்துள்ளார்.
ஆகவே நாள்தோறும் காலையில் சென்று, அவரிடம் வட்டி பணம் வசூல் செய்து வந்துள்ளார். இந்த நிலையில் தான், வட்டிப்பணத்தை வசூலிக்க அவருடைய வீட்டிற்கு சென்ற போது, வீட்டில் பெற்றோர் இல்லாததால், 12 வயது சிறுமி மட்டும் தனியாக இருந்துள்ளார்.
ஆகவே சுரேஷ் அந்தோனிராஜ், சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு வழங்கியிருக்கிறார். இதன் காரணமாக, பாதிக்கப்பட்ட சிறுமி இது குறித்து, தன்னுடைய பெற்றோரிடம் தெரிவித்ததை தொடர்ந்து, அதற்கு அடுத்த நாள் பெற்றோர் வீட்டில் மறைந்திருந்தனர். அப்போது, சுரேஷ் அந்தோணி ராஜ் சிறுமியிடம் பாலியல் தொந்தரவு கொடுக்க முயற்சி செய்தார்.
அப்போது வீட்டில் மறைந்திருந்த சிறுமியின் பெற்றோர், சுரேஷ் அந்தோணி ராஜை கையும், களவுமாக பிடித்து, அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அவரை ஒப்படைத்தனர். மேலும், அவரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள்.