கர்நாடக மாநிலம் பெங்களூருவில் தன்னுடைய மகளைப் பற்றி தவறாக குடிபோதையில் பேசிய நண்பரை அடித்தே கொன்ற நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பிரேம்ராஜ் மற்றும் தர்மேந்திர சிங் உள்ளிட்ட இருவரும் நண்பர்களாக பழகி வந்தனர். நேபாளத்தைச் சேர்ந்த இவர்கள் இருவரும் குடிப்பழக்கம் உள்ளவர்கள் என்று கூறப்படுகிறது. பெங்களூருவில் உள்ள ஒரு சொகுசு விடுதியில் தர்மேந்திர சிங் பணியாற்றி வந்தார். ஆனாலும், அவர் குடித்துவிட்டு, அடிக்கடி பணிக்கு வந்ததால், அந்த விடுதி நிர்வாகம் அவரை பணியில் இருந்து நீக்கியது.
இந்த நிலையில் தான் சமீபத்தில் தர்மேந்திர சிங் மனைவி மற்றும் மகள் உள்ளிட்ட இருவரும் வெளியே சென்று இருந்ததால், அப்போது தர்மேந்திர சிங் வீட்டில் இருந்துள்ளார். அப்போது வீட்டில் யாரும் இல்லாததால், தன்னுடைய நண்பர்களான பிரேம்ராஜ் உள்ளிட்ட சிலரை வீட்டிற்கு வரவழைத்து, நண்பர்களோடு, மது குடித்துள்ளார் தர்மேந்திர சிங்.
அதன் பிறகு தர்மேந்திர சிங்கின் நண்பர்களில் சிலர் மது குடித்துவிட்டு, வீட்டிற்கு புறப்பட்டு விட்டனர். அவர்கள் சென்ற பிறகு, தர்மேந்திரசிங், பிரேம்ராஜ் உள்ளிட்ட இருவரும் மது குடித்துவிட்டு, மீண்டும் மதுபான விடுதிக்கு வந்ததாக தெரிகிறது. பின்னர், தர்மேந்திர சிங் வீட்டிற்கு வந்த பிரேம்ராஜ் அவருடன் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது தர்மேந்திரசிங் மகள் தொடர்பாக, அவர் அவதூறாக பேசியதாக தெரிகிறது. இதன் காரணமாக, இருவருக்கும் இடையில் தகராறு எழுந்துள்ளது.
இதில் ஆத்திரம் கொண்ட தர்மேந்திர சிங், தன்னுடைய நண்பர் பிரேம்ராஜை கடுமையாக தாக்கி இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. இதனால், பிரேம்ராஜ் அதே இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் பதறிப்போன அவர், இந்த சம்பவம் குறித்து காவல்துறையினருக்கும், தன்னுடைய நண்பர்களுக்கும் உடனடியாக தகவல் தெரிவித்துள்ளார்.
அதன் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உயிரிழந்து கிடந்த பிரேம்ராஜின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பிறகு காவல்துறையினர் நடத்திய விசாரணையில், நடந்த அனைத்து உண்மையும் தெரிய வந்ததை தொடர்ந்து, தர்மேந்திர சிங்கை கைது செய்து, அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்து, சிறையில் அடைத்துள்ளனர் காவல்துறையைச் சேர்ந்தவர்கள்.