இந்தியாவின் பெரும் பணக்காரராக இருக்கும் முகேஷ் அம்பானி ஐபிஓ வெளியிடும் முயற்சியில் தீவிரமாக இருக்கும் நிலையில், தற்போதைய வர்த்தக கட்டமைப்பில் அனைத்து வர்த்தகமும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கீழ் இருக்கும் வேளையில் தனியாக பிரித்து ஐபிஓ வெளியிட்டால் பெரும் தடுமாற்றம் வரும் என்பதை உணர்ந்தார்.
இதை டெஸ்ட் செய்யும் வகையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் தற்போது ஆரம்பக்கட்ட வளர்ச்சி பாதையில் இருக்கும் தனது நிதி சேவை பிரிவை தனியாக பிரித்து பங்குச்சந்தையில் பட்டியலிடும் முயற்சியில் உள்ளது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் சாம்ராஜ்ஜியத்தில் இருக்கும் நிதி சேவை பிரிவை தனியாக பிரிக்க தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் (NCLT) ஒப்புதல் அளித்துள்ளது. NCLT ஜூன் 28 ஆம் தேதி ஒப்புதலை கொடுத்ததாகவும், அது ஜூலை 5 ஆம் தேதி NCLT அமைப்பின் இணையதளத்தில் அப்லோடு செய்யப்பட்டு உள்ளதாகவும் ரிலையன்ஸ் பங்குச்சந்தைக்கு சமர்ப்பித்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் சாம்ராஜ்ஜியத்தில் இருந்து தற்போது தனியாக பிரிக்கப்படும் நிறுவனத்தின் பெயர் Reliance Strategic Investments Ltd. இது மே மாதம் Jio Financial Services என பெயர் மாற்றப்பட உள்ளதாக அறிவித்துள்ளது.
இந்த நிலையில் ரிலையன்ஸ் பங்குச்சந்தைக்கு சமர்ப்பித்த அறிக்கையில் விரைவில் பிரிக்கப்பட்ட நிறுவனங்களின் பங்கு விநியோகம் மற்றும் பங்குச்சந்தையில் பட்டியலிடப்படும் நாள் ஆகியவை குறித்து ஆலோசனை செய்து முடிவு எடுக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. Jio Financial Services நிறுவனம் NBFC பிரிவில் இயங்க போகிறது. கடந்த மாதம் ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனத்தின் கன்ஸ்யூமர் பைனான்ஸ் ப்ரோகிராம்-ன் சோதனை திட்டத்தை துவங்கியுள்ளது என்றும், இதை தற்போது ரிலையன்ஸ் டிஜிட்டல் கடைகளில் பெரிய அளவில் செய்து வருகிறது என்றும் தகவல் வெளியானது.
ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் தனியாக பிரிந்து பங்குச்சந்தையில் பட்டியலிடும் பட்சத்தில் இந்தியாவின் 5வது அதிக மதிப்புடைய நிறுவனமாக இருக்கும் என Macquarie கணித்துள்ளது. ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் வர்த்தகம் பஜாஜ் பைனான்ஸ்-ன் வர்த்தகத்தை அதிகளவில் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.