நாங்குநேரியில் நடைபெற்ற அதே சம்பவத்தை போல, கரூர் அருகே பட்டியலினத்தைச் சேர்ந்த ஒரு பள்ளி மாணவரை, ஒரு கும்பல், விரட்டி, விரட்டி தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கரூர் மாவட்டம் உப்பிடமங்கலம் அருகே, பட்டியலினத்தைச் சார்ந்த மாணவர் ஒருவர், அந்த பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் தன்னுடைய பாட்டியுடன் வசித்து வருகிறார். இந்த சூழ்நிலையில் தான், நேற்று திடீரென்று ஊருக்குள் நுழைந்த ஒரு கும்பல், அந்த மாணவரை விரட்டி, விரட்டி தாக்க தொடங்கியது. இதை தடுக்க வந்த அந்த மாணவரின் பாட்டியையும், அந்த கும்பல் விட்டு வைக்கவில்லை. இதை கண்ட அந்த பகுதி மக்கள், அந்த கும்பலை தடுத்து, விரட்டி அடித்துள்ளனர். இந்த தாக்குதலில், பத்தாம் வகுப்பு மாணவரும், அவருடைய பாட்டியும் பலத்த காயமடைந்தனர்.
பின்னர் காயம் அடைந்த இருவரையும், அங்கு இருந்த நபர்கள், அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக, அனுப்பி வைத்தனர். அங்கே அவர்களுக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டிருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக, காவல் நிலையத்தில் புகார் வழங்கப்பட்டது. மாணவர் மற்றும் அவருடைய பாட்டி மீது ஒரு கும்பல் தாக்குதல் நடத்திய சம்பவம் அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவில், பதிவாகி இருந்தது. அதில் தாக்குதல் நடத்தியவர்களின் முகங்களும் பதிவாகி இருந்தனர்.
பின்னர், இது குறித்து, விசாரணை நடத்திய காவல்துறையினர், கல்லூரி மாணவர்கள் இரண்டு பேர் மற்றும் பள்ளி மாணவர்கள் இரண்டு பேர் என மொத்தம் நான்கு பேரை அதிரடியாக கைது செய்துள்ளனர். அதோடு, இந்த தாக்குதல் தொடர்பான பின்னணி காரணம் குறித்து, விசாரித்த காவல்துறையினருக்கு, ஒரு அதிர்ச்சி தகவல் கிடைத்தது.
அதாவது, அருகே உள்ள புலியூர் அரசு உதவி பெறும் பள்ளியில், 12-ஆம் வகுப்பு படித்து வரும் வேறு சில மாணவர்களுக்கும், தற்போது தாக்குதல் நடத்தப்பட்ட அந்த பட்டியலின மாணவருக்கும் இடையே, பேருந்தில் செல்லும்போது, தகராறு ஏற்பட்டிருக்கிறது. இந்த தகராறு காரணமாக, கல்லூரி மாணவர்களுடன் இணைந்து, 12-ஆம் வகுப்பு மாணவர்கள், பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த அந்த மாணவரை, தாக்கி இருக்கிறார்கள். அப்போது ,அதை தடுப்பதற்காக வந்த அவருடைய பாட்டியையும், அவர்கள் தாக்கி இருக்கிறார்கள் என்பது காவல்துறையினரின் விசாரணையில், தெரிய வந்திருக்கிறது.