விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் வம்பாமேடு பகுதியில் விற்பனை செய்யப்பட்ட கள்ளச்சாராயத்தை, எக்கியார்குப்பம் பகுதி மீனவர்கள் அருந்தியுள்ளனர். இதையடுத்து, மீனவர்கள் மயங்கி விழுந்து உயிருக்கு போராடியுள்ளனர். அவர்களை அப்பகுதி மக்கள் மீட்டு முண்டியம்பாக்கம், மரக்காணம் மற்றும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைகளில் அனுமதித்தனர். இதில் சிகிச்சை பலனின்றி 11 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தோரின் உடலுக்கு அமைச்சர்கள் பொன்முடி, செஞ்சி மஸ்தான் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
கள்ளச்சாரய மரணங்கள் தொடர்பாக விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் காவல் ஆய்வாளர்கள், உதவி காவல் ஆய்வாளர்கள் என மொத்தம் 7 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்ட 14-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாக உள்ளவர்களை கைது செய்ய 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருபவர்களை, தமிழ்நாடு முதலமைச்சர் முக.ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அவருடன் அமைச்சர்கள் பொன்முடி, செஞ்சி மஸ்தான், எ.வ.வேலு மற்றும் டிஜிபி சைலேந்திர பாபு ஆகியோரும் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்தனர்.
சாராய விற்பனையை தடுப்பு தொடர்பாக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் முதலமைச்சர் முக.ஸ்டாலின், டிஜிபி சைலேந்திர பாபு, கடலூர் ஆட்சியர் பாலசுப்பிரமணியம், விழுப்புரம் ஆட்சியர் பழனி, செங்கல்பட்டு ஆட்சியர் ராகுல் நாத், கள்ளக்குறிச்சி ஆட்சியர் ஷரவன் குமார் ஜெகாவத், விழுப்புரம் மாவட்ட எஸ்.பி ஸ்ரீநாதா, கள்ளக்குறிச்சி எஸ்.பி மோகன்ராஜ், செங்கல்பட்டு எஸ்.பி பிரதீப், கடலூர் எஸ்.பி ராஜாராம் ஆகியோருடன் ஆய்வுக் கூட்டம் நடத்தினார். கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சமும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் நிவாரணமாக வழங்க முதலமைச்சர் முக.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.