ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு இளம் பெண் வாங்கிய 10000 ரூபாய் கடனுக்காக, வட்டி கேட்டு மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த ஆசாமியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலத்தில், உள்ள நாகவுர் என்ற பகுதியைச் சேர்ந்த ஒரு இளம் பெண் தன்னுடைய கணவரின் சிகிச்சைக்காக பல பகுதிகளில் கடன் கேட்டார், ஆனாலும், கிடைக்கவில்லை. இதனால், அந்த பகுதியைச் சேர்ந்த மொஹ்ரதின் என்பவரிடம் வட்டிக்கு 10,000 ரூபாய் கடன் வாங்கி உள்ளார். அந்த 10,000 ரூபாய் கடனுக்காக, மாதம் 1000 ரூபாய் வட்டியை செலுத்தி வந்தார்.
மேலும் அந்தப் பெண் வாங்கிய கடனில் 5000 ரூபாயை திருப்பிக் கொடுத்து விட்டார். மீதம் உள்ள கடனுக்காக, மாதந்தோறும், 500 ரூபாய் வட்டியை கட்டி வந்தார். ஆனால், ஒரு மாதம் வட்டி கொடுக்க தாமதம் ஆனதன் காரணமாக, உடனடியாக கடன் கொடுத்தவர் அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்றுள்ளார்.
அப்போது, அந்த பெண்ணின் கணவர் வீட்டில் இல்லாததை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட அந்த நபர், அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து, பின்னர், அதனை தன்னுடைய செல்போனில் வீடியோ பதிவாக எடுத்துக் கொண்டார்.
பின்பு, அந்த வீடியோ பதிவை வைத்து, அந்த பெண்ணை பல்வேறு இடங்களுக்கு, அழைத்துச் சென்று, பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். ஆனாலும், திடீரென்று ஒரு நாள் அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் அந்த நபர் வெளியிட்டு விட்டார். இதனால், அதிர்ச்சி அடைந்த அந்த இளம் பெண், குளத்தில் குதித்து, தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்தார். ஆனாலும், அந்த பகுதி மக்கள் அவரைக் காப்பாற்றி விட்டனர்.
பின்னர், அந்த பெண், இந்த விவகாரம் குறித்து, காவல்துறையிடம் புகார் வழங்கினார், இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது, அந்த இளம்பெண் தன்னுடைய புகாரில், கடன் கொடுத்த நபர் வட்டி கேட்டு தொடர்ந்து, சித்திரவதை செய்து வந்ததாகவும், பாலியல் வன்கொடுமை செய்து, அதனை வீடியோ எடுத்து, மேலும் அதை சமூக வலைதளத்தில் வெளியிட்டிருப்பதாகவும் குறிப்பிட்டு இருக்கிறார். அதன் அடிப்படையில், வழக்கு பதிவு செய்து, அந்த நபரை கைது செய்து, விசாரித்து வருகிறோம் என்று தெரிவித்துள்ளார்.