சென்னை மதுரவாயல் அருகே பெற்ற தாயே மகனை இரும்புராடால் கொடூரமாக அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது பற்றி காவல்துறையினர், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
சென்னை மதுரவாயல் பகுதியை அடுத்துள்ள புளியம்பேடு பகுதியைச் சேர்ந்தவர் ஹரி (45). இவர் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி செல்வி (38) இந்த தம்பதிகளின் மகன் பூவரசன் (23), பூவரசன் ராமாபுரத்தில் இருக்கின்ற தனியார் சாப்ட்வேர் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் தான், செல்விக்கு அதிக அளவில் மன அழுத்தம் இருந்ததாக கூறப்படுகிறது. ஆகவே அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை வழங்குவதற்கான ஏற்பாட்டை அவருடைய மகன் பூவரசன் கவனித்து வந்துள்ளார்.
இப்படியான நிலையில்தான், ஹரி வேலைக்கு சென்று விட்ட நிலையில், சம்பவம் நடைபெற்ற அன்றைய தினம் வீட்டில் தனியாக இருந்த செல்வி மற்றும் பூவரசன் உள்ளிட்ட இருவரும் தலையில் இரும்பு ராடால் தாக்கப்பட்டு, இரத்த காயங்களுடன், மயங்கி கிடந்தனர்.
இது பற்றி தகவல் அறிந்த மதுரவாயல் காவல்துறையினர், விரைந்து சம்பவ இடத்திற்கு வந்து, இருவரையும் மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், பூவரசன் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். இந்த சூழ்நிலையில் தான், தாய் செல்வி தொடர்ந்து, சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக மதுரவாயில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து செல்வியிடம் விசாரணை மேற்கொண்ட போது, அவர் கடுமையான மன அழுத்தத்தில் இருந்ததால், தானே, தன்னுடைய மகனை இரும்பு ராடால் அடித்து கொலை செய்து விட்டு, தன்னைத்தானே, இரும்பு ராடால் அடித்து கொண்டது தெரியவந்தது.
மன அழுத்தம் காரணமாக, கடந்த 10 நாட்களுக்கு மேலாக செல்வி இரவில் தூங்காமல் இருந்து வந்ததாகவும், இதற்காக நாள்தோறும் அவர் தூக்க மாத்திரை சாப்பிட்டு வந்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் தான், சம்பவம் நடைபெற்ற அன்றைய தினம் தன்னுடைய கணவர் வேலைக்கு சென்று விட்ட நிலையில், செல்வி தூக்கம் வராமல் மன அழுத்தத்தில் இருந்தபோது, அருகில் உறங்கிக் கொண்டிருந்த மகன் பூவரசனை இரும்பு ராடால், தாக்கிவிட்டு, பின்னர் தன்னை தானே தலையில் தாக்கிக்கொண்டு, மயங்கி விழுந்தார் என்று காவல்துறையினரின் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.
ஆகவே தாய் செல்விக்கு மருத்துவமனையில் தொடர்ந்து, சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. மேலும் அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்வதற்கு காவல் துறையினர் முடிவெடுத்துள்ளனர்.