தன்னுடைய கணவர் வேறு ஒரு பெண்ணுடன் செல்போனில் அடிக்கடி பேசி வந்ததால், விரக்தி அடைந்த இளம் பெண், திருமணமான ஒரே மாதத்தில், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம், கேரள மாநிலத்தில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
அதாவது, கேரள மாநிலம், திருவனந்தபுரம் மாவட்டம், முள்ளில்லாவன்முடு பகுதியைச் சேர்ந்த ரேஷ்மா (23) என்பவருக்கும், அருவிகாராபகுதியைச் சேர்ந்த அக்ஷய் ராஜ் என்ற இளைஞருக்கும் சென்ற மாதம் 12ஆம் தேதி திருமணம் நடந்தது. இதனைத் தொடர்ந்து, ரேஷ்மா தன்னுடைய கணவருடன் அருவிக்காரா பகுதியில் இருக்கின்ற அவருடைய வீட்டில் வசித்து வந்தார்.
இந்த சூழ்நிலையில்தான், ரேஷ்மாவின் கணவர் அக்ஷய்ராஜ் வெளியே சென்று விட்ட நிலையில், நேற்று அதிகாலை புதுமண பெண்ணான ரேஷ்மா, அவருடைய அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்ஷய்ராஜின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இந்த தகவலின் அடிப்படையில், அங்கு வந்த காவல்துறையினர், அறையில் மின்விசிறியில் தூக்கிலே தூங்கிக் கொண்டிருந்த ரேஷ்மாவின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
அத்துடன், இது கொலையா அல்லது தற்கொலையா? என்ற பல்வேறு கோணத்தில், காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
காவல்துறையினர் நடத்திய அதிரடி விசாரணையில், ரேஷ்மாவின் கணவர் அக்ஷய்ராஜ், வேறொரு பெண்ணுடன், அடிக்கடி தொலைபேசியில் தொடர்ந்து பேசி வந்ததால், கணவருக்கும், வேறொரு பெண்ணுக்கும் தொடர்பு இருப்பதாக எழுந்த சந்தேகத்தின் பேரில், புதுமன பெண்ணான ரேஷ்மா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிய வந்திருக்கிறது.