வேலூரை அடுத்துள்ள இலவம்பாடி கிராமம் கருநகர் தெருவில் வசித்து வருபவர் சுரேஷ்(30) கட்டிட மேஸ்திரி ஆன இவருக்கும் லதா (29) என்ற பெண்ணுக்கும் கடந்த 10 வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு 1 மகன், 2 மகள்கள் என 3 குழந்தைகள் இருக்கின்றன.
அதோடு சுரேஷுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததன் காரணமாக, கணவன், மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் கணவன், மனைவி இருவருக்கும் அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் தான் நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் கணவன், மனைவிக்கிடையே மறுபடியும் தகராறு ஏற்பட்ட நிலையில், லதா சுரேஷை வசைபாடி அவர் மீது தாக்குதல் நடத்தியதாக சொல்லப்படுகிறது.
அதோடு அந்த பெண்மணி வீட்டில் இருந்த மண்ணெண்ணெய் கேனை எடுத்து சுரேஷ் மீது ஊற்றி கண்ணிமைக்கும் நேரத்தில் தீப்பெட்டியை எடுத்து தீ பற்ற வைத்திருக்கிறார். உடனடியாக சுரேஷின் உடல் முழுவதும் தீ பரவியதால் சுரேஷ் வலியால் அலறி துடித்துள்ளார். இதன் பின்னர் அவருடைய அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்துள்ளனர். பிறகு தீயை அணைத்து அவசர ஊர்தியின் மூலமாக அந்த பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது. அதோடு 90 சதவீதம் தீக்காயம் அடைந்த அவருக்கு, மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை வழங்கி வந்தனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டதை தொடர்ந்து, அங்கு வந்த காவல்துறையினர் சுரேஷிடம் வாக்குமூலம் பெற்றனர். அந்த வாக்குமூலத்தின் அடிப்படையில், சுரேஷின் மனைவியை கைது செய்தனர் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.