நாமக்கல்லில் ஷவர்மா சாப்பிட்ட 14 வயது சிறுமி உயிரிழந்த சம்பவத்தை அடுத்து, தமிழ்நாடு முழுவதும் உணவகங்களில் ஆய்வு செய்ய அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார்.
நாமக்கல் மாவட்டம் பரமத்தித்வேலூர் சாலையில் ஐவின்ஸ் என்ற பெயரில் செயல்பட்டு வரும் உணவகத்தில் மாணவ-மாணவிகள் 10க்கும் மேற்பட்டோர் இரவு உணவு சாப்பிட்டுள்ளனர். இந்த உணவு சாப்பிட்ட மாணவ, மாணவிகளுக்கு அதிகாலை வாந்தி, மயக்கம், வயிற்றுப்போக்கு, காய்ச்சலால் உடல் நலம் பாதிக்கப்பட்டு நாமக்கல் மாவட்ட தலைமை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இவர்களில் 6 மாணவிகள், 8 மாணவர்கள் என 14 பேர் மொத்தமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், நாமக்கல்- சந்தைப்பேட்டை புதூரை சேர்ந்த கலையரசி (14) என்ற சிறுமி குடும்பத்தாருடன் ஐவின்ஸ் உணவகத்தில் சாப்பிட்டுள்ளார். இதையடுத்து உடல் நலம் பாதிக்கப்பட்ட சிறுமி நேற்று காலை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், உயிரிழந்தார். மேலும், உயிரிழந்த சிறுமியின் தம்பி பூபதி (12), தாய் சுஜாதா, உறவினர்கள் சுனோஜ், கவிதா ஆகியோர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இந்த சம்பவம் குறித்து உணவக உரிமையாளர் நவீன்குமார் (25), மாஸ்டர்கள் சஞ்சய் மககுத் (27), தபாஸ் குமார்(30) ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் தற்காலிகமாக ஷவர்மா, கீரில் சிக்கன் தயார் செய்ய தடை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் உள்ள உணவகங்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்ய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார்.
உணவகங்களில் உரிய வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுகிறதா? ப்ரீசர் பெட்டிகள் உள்ளதா? என கண்காணிக்க மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உரிய நெறிமுறைகளை பின்பற்றப்படாத மற்றும் தரமற்ற உணவுகளை விற்பனை செய்யும் உணவகங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார்.