குடிபோதையில் நாள்தோறும் அட்டகாசம் செய்து வந்த கணவனை முகத்தில் மிளகாய் பொடியை தூவி கொடூரமாக வெட்டி படுகொலை செய்த மனைவியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தேனி மாவட்டம் பாலக்கொம்பை ராயவேலூர் பகுதியை சேர்ந்தவர் சண்முகவேல்(37). இவருடைய மனைவி அழகு சின்னு (31) கூலி தொழிலாளர்களான இந்த தம்பதிகளுக்கு, இரண்டு குழந்தைகள் இருக்கின்றன.
இந்த நிலையில், கணவன், மனைவி இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த சில வருடங்களாக இருவரும் பிரிந்து வாழ்ந்த நிலையில், உறவினர்கள் பேச்சுவார்த்தை நடத்தி, சமீபத்தில் இருவரையும் சேர்த்து வைத்துள்ளனர்.
ஆனாலும், கணவர் சண்முகவேல் நாள்தோறும் குடித்துவிட்டு வருவதால், கணவன், மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் தான், நேற்று முன்தினம் இரவும் வழக்கம் போல குடித்து விட்டு வந்த சண்முகவேல் மனைவியிடம் தகராறு செய்திருக்கிறார். இதன் காரணமாக, ஆத்திரம் கொண்ட அழகு சின்னு வீட்டில் இருந்த மிளகாய் பொடியை எடுத்து, கணவரின் முகத்தில் வீசினார். இதனால், எரிச்சல் தாங்க முடியாமல், அலறி துடித்த சண்முகவேலை, அரிவாளை எடுத்து கை, கால் மற்றும் பின்னந்தலை போன்ற பகுதிகளில் சரமாரியாக வெட்டியுள்ளார் அழகுச்சின்னு.
இதனால் இரத்த வெள்ளத்தில் சரிந்து கீழே விழுந்த சண்முகவேல், சம்பவ இடத்திலேயே துடிதுடித்து, பரிதாபமாக உயிரிழிந்தார். இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த ராஜதானி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து, சண்முகவேல் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதோடு, மனைவி அழகு சின்னுவை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
மேலும், இது தொடர்பாக காவல் நிலையத்தில் அழகு சின்னு மது போதையில் தகராறு செய்ததால், அவர் மீது மிளகாய் பொடியை தூவி அரிவாளால், வெட்டி படுகொலை செய்ததாக வாக்குமூலம் வழங்கி இருக்கிறார்.