குடும்ப தகராறில், சொந்த கணவனையே கயிற்றால் கழுத்தை இறுக்கி கொடூரமாக கொலை செய்த மனைவியால், அதிர்ந்து போன மாமியார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் பகுதியைச் சேர்ந்தவர் ரங்கசாமி (45). எலெக்ட்ரிசியானான இவரது மனைவி ஜெயந்தி (36). இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன், ஒரு மகள் என இரண்டு குழந்தைகள் இருக்கின்றன. இந்த நிலையில், ரங்கசாமியின் மகன் சந்தோஷ் வேலைக்கு சென்று விட்டார். அப்போது, கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, இவர்களின் மகள் தீபிகா தன்னுடைய பாட்டி வீட்டிற்கு சென்று விட்டார்.
இந்நிலையில் தான், நேற்று இரவு மறுபடியும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அந்த சமயத்தில், ஆத்திரம் கொண்ட ஜெயந்தி, கணவர் ரங்கசாமியின் கழுத்தை கயிற்றால், இறுக்கி, கொடூரமான முறையில் கொலை செய்திருக்கிறார். அதன் பிறகு, அவருடைய உடலை அறையில் வைத்து, அதன் மீது துணிகளை போட்டு மறைத்துள்ளார். பின்னர் எதுவும் தெரியாது. போல நடமாடிக் கொண்டிருந்தார் என சொல்லப்படுகிறது. அப்போது அங்கு வந்த ஜெயந்தியின் மகள் தீபிகா, அப்பா எங்கே என்று தாயை கேட்டுள்ளார். ஆனால், மகள் கேட்டதற்கு ஜெயந்தி சரியாக பதிலளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
உடனே இது தொடர்பாக தீபிகா தன்னுடைய பாட்டியிடம் தெரிவித்திருக்கிறார். அவர் பதற்றத்துடன் ஓடி வந்து, மகனை தேடியபோது, அறையில் ரங்கசாமியின் உடல் துணிகளால் மூடப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், அலறியபடியே வெளியே ஓடி வந்தார். அவர்களைப் பார்த்ததும் ஜெயந்தி அந்த பகுதியில் இருந்த கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.