கர்நாடக மாநிலம் மைசூர் பகுதியில், இளைஞர் ஒருவர், வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
அதாவது, மைசூர் பகுதியில் இருக்கின்ற எச்டி கோட் தாலுகாவை சேர்ந்த பானுபிரகாஷ் என்கின்ற சித்து(24) என்பவர், ஹண்டி கிராமத்தை சேர்ந்த ஒரு திருமணமான பெண்ணுக்கு, செல்போன் மூலமாக குறுஞ்செய்தியை அடிக்கடி அனுப்பியதோடு, இரவு நேரத்தில், அவரை தொடர்பு கொண்டு, அவருக்கு மிகுந்த தொந்தரவு கொடுத்துள்ளார்.
ஆகவே, அந்தப் பெண்ணின் குடும்பத்திற்கும், அந்த இளைஞரின் குடும்பத்திற்கும் இடையே, கடுமையான வாக்குவாதம் எழுந்துள்ளது. ஆகவே, அந்த பகுதி மக்கள் அந்த இரு குடும்பத்தையும் சமாதானம் செய்து, அனுப்பி வைத்திருக்கிறார்கள்.
இந்த நிலையில் தான்,நேற்று மாலை, மைசூர் பகுதியில் இருக்கின்ற கபினி அணையின் இடது கரையில், கழுத்து, முதுகு, வயிறு போன்ற பல்வேறு பகுதிகளில், அரிவாளால் வெட்டப்பட்ட காயங்களோடு, சித்து உயிரிழந்த நிலையில், கிடந்துள்ளார். அவருடைய உடலை கைப்பற்றிய காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
காவல்துறையினர் நடத்திய விசாரணையில், கொலை செய்யப்பட்டது சித்து தான் என்பது உறுதி செய்யப்பட்டது. மேலும், இது தொடர்பாக சாகூர் காவல் நிலைய காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து, ஆறு பேரை கைது செய்து இருக்கின்றார்கள். மேலும், அவர்களிடம் தொடர்ந்து, விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் மைசூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.