காவிரி நீர் பகிர்வு தொடர்பாக டெல்லியில் காணொலி வாயிலாக நடைபெற்ற காவிரி நீர் ஒழுங்குமுறை குழுக் கூட்டத்தில், தமிழகத்திற்கு தற்போது தண்ணீர் திறந்துவிட முடியாது என்று கர்நாடகா தெரிவித்துள்ளது.
காவிரி நீர் பகிர்வு விவகாரம் பல ஆண்டுகளாக தமிழகத்துக்கும் கர்நாடகாவுக்கும் இடையே நீடித்து வரும் பிரச்சினையாக உள்ளது. மழை நன்றாக பெய்தால் உபரி நீரை திறந்து விடும் கர்நாடகா. பருவமழை குறைவாக இருக்கும் ஆண்டுகளில் தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய நீரை தருவதில்லை. இதனால் இரு மாநிலங்களுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் தொடர்ந்து எழுந்து வருகின்றன. இது தொடர்பாக கர்நாடக அதிகாரிகள் விளக்கமளிக்கையில், ஜூன் மாதத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய தென்மேற்கு பருவமழை பெய்யாததால் அணைகளுக்கு நீர்வரத்து மிகவும் குறைந்துள்ளதாக கூறினர். ஜூலை மாதத்திலும் சில பகுதிகளில் மட்டுமே மழை பதிவாகியுள்ளதால், அணைகளில் போதிய அளவு நீர் சேமிப்பு இல்லை என்றும், காவிரி படுகை முழுவதும் நீர் பற்றாக்குறை நிலவி வருவதாகவும் தெரிவித்தனர். தற்போதைய சூழலில் தமிழகத்திற்கு நீர் திறந்துவிடுவது சாத்தியமில்லை என அவர்கள் வலியுறுத்தினர்.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற தமிழக அதிகாரிகள், உச்சநீதிமன்ற உத்தரவுகளும் காவிரி நீர் பகிர்வு நடைமுறைகளும் பின்பற்றப்பட்டு, தமிழகத்திற்கு உரிய நீரை உடனடியாக வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.இதற்கிடையில், கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி செய்தியாளர்களிடம் பேசியபோது, காவிரி அணைகளில் உள்ள நீரை தற்போதைக்கு குடிநீர் தேவைக்கே முன்னுரிமையாக பயன்படுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டை எடுத்துரைத்தார். தமிழகம் நீர் திறக்க கோரிக்கை வைத்திருந்தாலும், தற்போதைய நீர் இருப்பு நிலையை குழுவிடம் அதிகாரிகள் விளக்கியதாகவும், தமிழகத்திற்கு நீர் திறக்க வேண்டும் என்ற எந்த உத்தரவும் கூட்டத்தில் பிறப்பிக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
இது ஒருபுறம் இருக்க மறுபுறம், தமிழகத்தில் மேட்டூர் அணை முழுமையாக திறக்கப்படாததால் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் ஏற்கனவே சிரமங்களை எதிர்கொண்டு வரும் நிலையில், கர்நாடகாவின் இந்த நிலைப்பாடு விவசாயிகளிடையே கவலையை அதிகரித்துள்ளது.
Aiso Read:2 மாத பெண் குழந்தையின் உடலில் இருந்த காயங்கள்.. சிசிடிவியில் பதிவான அதிர்ச்சி காட்சிகள்!


