தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு விஜய் தலைமையிலான தவெக அரசு அமைந்துள்ளது.. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் விஜய்யின் தவெக 108 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.. எனினும் ஆட்சியமைக்க போதுமான பெரும்பான்மை கிடைக்காததால் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய காங்கிரஸ் தவெகவுக்கு ஆதரவு வழங்கியது.
இதை தொடர்ந்து திமுக கூட்டணியில் இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விசிக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகள் வெளியில் இருந்து ஆதரவு வழங்கியதால் தவெக ஆட்சி அமைத்தது. மேலும் சட்டப்பேரவையில் தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் விஜய் வெற்றி பெற்றார்.. தவெகவுக்கு ஆதரவாக 144 பேர் வாக்களித்ததால் இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக அரசு தப்பியது.
இதனிடையே ஆட்சியமைக்க ஆதரவு வழங்கிய காங்கிரஸ், விசிக, ஐயுஎம்எல் கட்சிகளுக்கும் அமைச்சரவையில் இடம் கொடுக்கப்பட்டுள்ளது.. இதன் மூலம் 1952-க்கு பின்னர் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது.. முதல்வர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சிக்கு 2 அமைச்சர்கள், விசிக, ஐயுஎம்எல் கட்சிகளுக்கு தலா 1 அமைச்சர் என கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது.
இந்த நிலையில் முதல்வர் விஜய் நாளை டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.. முதல்வரான பின் விஜய் டெல்லி செல்வது இது முதன்முறையாகும்.. தனி விமானம் மூலம் நாளை டெல்லி செல்லும் முதல்வர் விஜய் பிரதமர் மோடி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தி உள்ளிட்ட மூத்த சந்திக்க விஜய் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.. மேலும் தமிழகம் சார்ந்த முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவையும் பிரதமர் மோடியிடம் முதல்வர் விஜய் கொடுக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது..
முன்னதாக தேர்தலில் வெற்றி பெற்ற உடனேயே முதல்வர் விஜய், முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின், மதிமுக தலைவர் வைகோ, பாமகவின் அன்புமணி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், விசிக தலைவர் திருமாவளவன், கம்யூனிஸ்ட், காங்கிரஸ் தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
அதிமுக எம்.எல்.ஏக்கள் அடுத்தடுத்து எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்து வருகின்றனர்.. இதனால் தமிழகத்தில் இதுவரை இல்லாத கேவலமான குதிரை பேர அரசியலை முதல்வர் விஜய் செய்துவருதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி உள்ளன.. அதிமுகவில் இருந்து மேலும் சில எம்.எல்.ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது..
தற்போது முதல்வர் விஜய் தலைமையிலான தனிப்பெரும்பான்மை இல்லாமல் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் இயங்கி வருகிறது.. எனவே பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி செய்ய தவெக அரசு நினைக்கிறதாம்.. எனவே அதிமுக எம்.எல்.ஏக்களை ராஜினாமா செய்ய வைத்து, அவர்களை தவெகவில் இணைக்க திட்டமிட்டுள்ளதாம்.. அப்படி அதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்யும் போது அந்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறும்.. இந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற்று பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி செய்ய தவெக நினைப்பதாகவும் கூறப்படுகிறது.. இந்த பரபரப்பான அரசியல் சூழலில் விஜய்யின் டெல்லி பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது..



