கோவை டவுன்ஹால் பகுதியில் வட மாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடந்ததாக சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வந்த வீடியோக்களால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது இது தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே வட மாநில தொழிலாளர்கள் குறித்தான சர்ச்சைகள் பரவலாக நிலவி வருகின்றன. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் வட மாநில தொழிலாளர்கள் விரட்டியடிக்கப்படுவதாக செய்திகள் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தி வருகின்றன. அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வசதிகளை செய்து கொடுக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் கோவை பகுதியில் வட மாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக புதிய செய்திகள் பரவி மீண்டும் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.
கோவை டவுன்ஹால் பகுதி இடையர் வீதியில் வடமாநில தொழிலாளர்களை சில மர்ம நபர்கள் தாக்கியதாக நூற்றுக்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் நேற்று இரவு ஒன்று கூடினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை சூரிய பிரகாஷ் பிரகதீஸ்வரன் மற்றும் வேல்முருகன் ஆகியோரை வடமாநில தொழிலாளர்களை தாக்கியதாக கைது செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.