அன்புக்குரிய ஒருவர் உயிரிழந்த பிறகு, அவரை கனவில் காண்பது போன்ற அனுபவங்களை சிலர் தங்களது துக்கத்துடன் தொடர்புபடுத்திக் கொள்வது உண்டு. ஆனால், இதுபோன்ற நம்பிக்கைகள் தீவிரமான மனவேதனையுடன் இணைந்தால் எதிர்பாராத விபரீதங்களுக்கு வழிவகுக்கும் என்பதற்கு ஆந்திராவில் நடந்துள்ள சம்பவம் சோகமான உதாரணமாகியுள்ளது. ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் ராஜநகரம் அருகே உள்ள பத்துங்க பாடு கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமண் ராவ் (32). மாற்றுத்திறனாளியான இவருக்கும், அதேபோல் மாற்றுத்திறனாளியான சியாமளா (30) என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்குப் பிறகு இருவரும் திருப்பதியில் வசித்து வந்தனர்.
இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு லட்சுமண் ராவின் தாய் திடீரென உயிரிழந்துள்ளார். தாயின் மீது மிகுந்த பாசம் கொண்டிருந்த அவர், அவரது மறைவால் கடுமையாக பாதிக்கப்பட்டு தொடர்ந்து சோகத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. தாயின் இறப்புக்குப் பிறகு, அவர் அடிக்கடி தனது மனைவியிடம், “அம்மா என் கனவில் வருகிறார். தன்னுடன் வருமாறு அழைக்கிறார்” எனக் கூறி வந்ததாக தெரிகிறது. ஒரு கட்டத்தில், தாய் இல்லாத வாழ்க்கையை தன்னால் தொடர முடியாது என்றும், இருவரும் தற்கொலை செய்து கொண்டு தாயிடம் சென்றுவிடலாம் என்றும் மனைவியிடம் தெரிவித்துள்ளார்.
ஆனால், கணவரின் இந்த முடிவுக்கு சியாமளா சம்மதிக்கவில்லை. தற்கொலை எண்ணத்தை கைவிடுமாறு தொடர்ந்து அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. இருப்பினும், லட்சுமண் ராவ் தனது முடிவில் இருந்து பின்வாங்கவில்லை. இதற்கிடையே, இவர்களது வீட்டின் கதவு நீண்ட நேரமாக திறக்கப்படாமல் இருந்ததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் கதவை உடைத்து உள்ளே சென்றபோது, லட்சுமண் ராவும் சியாமளாவும் உயிரிழந்த நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இருவரின் உடல்களையும் மீட்ட போலீஸார் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். விசாரணையின்போது லட்சுமண் ராவின் செல்போனை போலீஸார் ஆய்வு செய்தனர். அதில் பதிவாகியிருந்த செல்பி வீடியோ ஒன்றில், தாயின் மரணத்தைத் தாங்க முடியாமல் மனைவியைக் கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக அவர் பேசியிருந்தது தெரியவந்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்களின் மரணம் தொடர்பான முழுமையான காரணம் குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read: விவாகரத்தான மனைவி மீது பட்டப்பகலில் ஆசிட் வீச்சு! முன்னாள் கணவரின் அதிர்ச்சி செயல்…



