2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் எந்த ஒரு கட்சிக்கும் தெளிவான பெரும்பான்மை கிடைக்காத நிலையில், அரசியல் பரபரப்பு உச்சத்தை எட்டியுள்ளது. தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. ஆனால் ஆட்சியை அமைக்க தேவையான 118 எம்.எல்.ஏ ஆதரவு இல்லாததால், “தொங்கு சட்டசபை” நிலை உருவாகியுள்ளது.
இந்த சூழலில், இந்திய தேசிய காங்கிரஸ் தவெகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்குவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதேசமயம், “மதவாத சக்திகளை கூட்டணியில் சேர்க்கக்கூடாது” என்ற நிபந்தனையையும் முன்வைத்துள்ளது. இதன் மூலம் தவெக கூட்டணியின் எம்.எல்.ஏ எண்ணிக்கை 113ஆக உயர்ந்துள்ளது. இன்னும் 5 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தேவைப்படுவதால், விடுதலை சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள், பட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்டோருடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், விஜய் தமிழக பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்ை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். அவருடன் தவெக மூத்த நிர்வாகிகள் செங்கோட்டையன், புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார், வெங்கட் ரமணன் ஆகியோர் உடனிருந்தனர். ஆனால், 118 எம்.எல்.ஏக்களின் முழுமையான ஆதரவு கடிதம் சமர்ப்பிக்கப்படாததால், விஜய் 2 நாட்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.
இந்த சந்திப்பை தொடர்ந்து ஆளுநர் மாளிகை சார்பில் ஊடகங்களுக்கு செய்தி குறிப்பு வெளியிடப்பட்டது. அந்த குறிப்பில் ‘மரியாதைக்குரிய தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்’ என குறிப்பிடப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தவெக தலைவர் விஜய் தற்போது வரை முதலமைச்சராக பதவி ஏற்காத நிலையில் அவரை முதலமைச்சர் என குறிப்பிட்டு ஆளுநர் மாளிகை செய்திகுறிப்பு வெளியிட்டுள்ளது பேசுபொருளானது.



