இந்தியாவின் புதிய ராணுவ தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவர் ஜூன் 30-ஆம் தேதி அப்பதவியை ஏற்பார் என்றும் அரசு அறிவித்துள்ளது.
தற்போதைய ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதியின் பதவிக்காலம் நிறைவடைந்த பிறகு தீரஜ் சேத் பொறுப்பேற்பார். ஜெனரல் உபேந்திர திவேதியின் பதவிக்காலம் ஜூன் 2026 வரை இருக்கும்.. இவர் ஜூன் 30, 2024 அன்று ராணுவத் தளபதியாகப் பொறுப்பேற்றார். ராணுவத் தளபதியின் பதவிக்காலம் என்பது மூன்று ஆண்டுகள் அல்லது 62 வயது பூர்த்தியடைவது – இதில் எது முந்தையதோ அதுவரை அமலில் இருக்கும்.
யார் இந்த தீரஜ் சேத்..?
லெப்டினன்ட் ஜெனரல் சேத் தற்போது ராணுவத் துணைத் தளபதியாக (VCOAS) பணியாற்றி வருகிறார்; இப்பொறுப்பை அவர் இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஏற்றார். தற்போதைய ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவிவேதி ஜூன் 30-ஆம் தேதி பணியிலிருந்து ஓய்வு பெறுவதைத் தொடர்ந்து, சேத் ராணுவத் தளபதி பதவியை ஏற்பார்.
கடக்கவாஸ்லாவில் உள்ள தேசிய பாதுகாப்பு அகாடமியின் முன்னாள் மாணவரான லெப்டினன்ட் ஜெனரல் சேத், 1986 டிசம்பரில் ‘ஆர்மர்டு கார்ப்ஸ்’ (Armoured Corps) பிரிவில் அதிகாரியாகப் பணியில் சேர்ந்தார். ஏறக்குறைய நான்கு தசாப்த கால பணி அனுபவம் கொண்ட இவர், ராணுவ நடவடிக்கைகள், உத்திசார் திட்டமிடல், திறன் மேம்பாடு மற்றும் நிறுவன ரீதியான செயல்பாடுகள் எனப் பல்வேறு துறைகளில் பரந்த அனுபவத்தைக் கொண்டுள்ளார்.



