நாம் உயிருடன் இருக்க நுரையீரல் செய்யும் பணி மிகவும் முக்கியமானது. ஆனால், பெரும்பாலானோர் நுரையீரலின் ஆரோக்கியத்தைப் பற்றி சிந்திப்பது சுவாசப் பிரச்சனை ஏற்பட்ட பிறகுதான். மூச்சுத் திணறல், அதிக சோர்வு போன்ற அறிகுறிகள் தோன்றும் வரை பலர் அதை சாதாரண விஷயமாகவே எடுத்துக் கொள்கிறார்கள். ஆனால், நுரையீரலின் செயல்திறன் குறைந்து வருகிறதா என்பதை சில எளிய அறிகுறிகள் மூலம் முன்கூட்டியே கவனிக்க முடியும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து மருத்துவர் ஷரோன் கூறுகையில், நமது நுரையீரல் ஆரோக்கியமாக உள்ளதா என்பதை அறிய ஒரு எளிய சோதனையை வீட்டிலேயே கவனிக்கலாம் என தெரிவித்துள்ளார். அதன்படி, அமைதியாக அமர்ந்த நிலையில் மூச்சை பிடித்து வைக்கும் போது, 20 விநாடிகள் அல்லது அதற்கு மேல் சிரமமின்றி மூச்சை தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை என்றால், அது நுரையீரலின் செயல்திறன் குறித்து கவனிக்க வேண்டிய அறிகுறியாக இருக்கலாம் என்று அவர் கூறுகிறார்.
அதேபோல், வழக்கமான வேலைகளை செய்யும்போது அதிகப்படியான மூச்சுத் திணறல் ஏற்படுவது, சிறிய தூரம் நடந்தாலே மூச்சு வாங்குவது அல்லது சில படிக்கட்டுகள் ஏறியவுடன் சுவாசிப்பதில் சிரமம் ஏற்படுவது போன்ற அறிகுறிகளையும் அலட்சியப்படுத்தக் கூடாது என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இந்த அறிகுறிகள் அனைத்தும் உடலில் ஏதோ ஒரு மாற்றம் ஏற்படுவதற்கான ஆரம்பகட்ட எச்சரிக்கை சமிக்ஞைகளாக இருக்கலாம். குறிப்பாக, சுவாசக் குழாய் தொடர்பான பிரச்சனைகள், நுரையீரல் செயல்பாடு குறைதல் போன்ற பாதிப்புகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை பெறுவது மிகவும் முக்கியம்.
நுரையீரலின் ஆரோக்கியத்தை பாதுகாக்க, புகைப்பிடிக்கும் பழக்கத்தை தவிர்ப்பது, தூய்மையான காற்றை சுவாசிப்பது, உடற்பயிற்சி செய்வது மற்றும் உடலில் ஏற்படும் மாற்றங்களை கவனிப்பது அவசியம். எனவே, மூச்சுத் திணறல் போன்ற அறிகுறிகள் தொடர்ந்து இருந்தால் அதை சாதாரணமாக நினைத்து புறக்கணிக்காமல், உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது. ஆரம்பத்திலேயே கவனம் செலுத்தி சரியான சிகிச்சை எடுத்துக் கொண்டால், பல சுவாச பிரச்சனைகளை கட்டுப்படுத்தி நுரையீரல் ஆரோக்கியத்தை பாதுகாக்க முடியும் என மருத்துவர் ஷரோன் தெரிவித்துள்ளார்.



