பள்ளியில் ₹10 திருடியதாக ஆசிரியர்கள் பொய்க் குற்றச்சாட்டு கூறி அவமானப்படுத்தியதால், விரக்தியடைந்த எட்டாம் வகுப்பு மாணவி எடுத்த விபரீத முடிவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூரு நகர்ப்புற மாவட்டம் அனேக்கல் தாலுகா மரசூரு கிராமத்தை சேர்ந்தவர் அருணா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் அருகில் உள்ள அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை அன்று, சிறுமி வழக்கம் போல் இரவு தூங்க சென்றுள்ளார். ஆனால் வெள்ளிக்கிழமை காலையில் சிறுமி வெகுநேரமாகியும் எழுந்திருக்கவில்லை.
இதனால் சந்தேகம் அடைந்த பெற்றோர் மாணைவியை எழுப்பியபோது அவர் உயிரிழந்து கிடந்துள்ளார். இதனால் அதிர்ச்சியில் உறைந்து போன பெற்றோர் சம்பவம் குறித்து உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சூர்யாநகர் போலீசார், மாணவியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து, சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் மாணவி எழுதிய கடிதம் ஒன்றை போலீசார் கைப்பற்றினர். கைப்பற்றப்பட்ட கடிதத்தில், பள்ளியில் 20 ரூபாய் மற்றும் 10 ரூபாய் திருடியதாகத் தன் மீது வீண்பழி சுமத்தப்பட்டதாகவும், ஆசிரியர்கள் கண்டித்ததால் ஏற்பட்ட அவமானத்தையும் மன உளைச்சலையும் தாங்க முடியவில்லை என்றும் குறிப்பிட்டிருந்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடிதத்தில், தனது முடிவுக்கு யாரையும் குற்றம் சாட்ட வேண்டாம் என்றும், குறிப்பாக தனது தாயை பொறுப்பாக்க வேண்டாம் என்றும் மாணவி எழுதியுள்ளார். இதையடுத்து, மாணவி எழுதிய கடிதம், ஆசிரியர்களின் செயல்பாடுகள் மற்றும் பள்ளியில் நடந்ததாகக் கூறப்படும் சம்பவங்கள் உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு செய்து, உண்மை நிலையை கண்டறியும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
Also Read: பெற்றோர்களே கவனம்!! வீட்டில் தனியாக இருந்த பள்ளி மாணவிக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்..



