கடலூரில் சாலையோர வீட்டு வாசலில் படுத்துறங்கிய 70 வயது மூதாட்டியின் காது மற்றும் மூக்கை அறுத்து கொடூரமாக கொலை செய்த மர்ம நபர்கள், அவர் அணிந்திருந்தது கவரிங் நகை என தெரிந்ததும் உடலை அப்படியே விட்டுவிட்டு தப்பியோடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த கலா (70) என்ற மூதாட்டி, கடந்த சில ஆண்டுகளாக கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் உள்ள நகைக்கடைகளின் வெளியே சாலையை சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வந்தார். வேலை முடிந்ததும், திருப்பாதிரிப்புலியூர் மார்க்கெட் நகர் ரயில்வே தண்டவாளம் அருகே உள்ள முரளி என்பவரது வீட்டின் வாசலில் இரவில் தூங்குவதை அவர் வழக்கமாக கொண்டிருந்தார். சம்பவத்தன்று இரவும் வழக்கம்போல் முரளியின் வீட்டு வாசலில் கலா படுத்துறங்கியுள்ளார்.
மறுநாள் காலை அப்பகுதி மக்கள் பார்த்தபோது, கலா படுகாயங்களுடன் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அவரது காது மற்றும் மூக்கு ஆகிய பகுதிகள் கொடூரமாக அறுக்கப்பட்டிருந்தன. இதுகுறித்து உடனடியாக திருப்பாதிரிப்புலியூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டி அணிந்திருந்த நகைகளை கொள்ளையடிக்கும் நோக்கிலேயே மர்ம நபர்கள் இந்த தாக்குதலை நடத்தி அவரை கொலை செய்திருக்கலாம் என தெரியவந்துள்ளது. மூதாட்டி அணிந்திருந்தது கவரிங் நகைகள் என்பதை அறிந்த பின்னரே, நகைகளை கழற்றாமல் கொலையாளிகள் அப்படியே விட்டுவிட்டு தப்பி சென்றிருக்கக்கூடும் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள திருப்பாதிரிப்புலியூர் போலீசார், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.
Read More : ஜப்பானில் பெருவெள்ளம்!. ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு சிக்கல்? நூற்றுக்கணக்கான வீரர்கள் அவசர வெளியேற்றம்!



