கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே சாலை விபத்தில் விவசாயி உயிரிழந்ததாக முதலில் கருதப்பட்ட நிலையில், விசாரணை தீவிரமடைந்தபோது அது திட்டமிட்ட கொலை என்பது தெரியவந்துள்ளது. மனைவியின் தகாத உறவை கணவர் கண்டித்ததாகவும், இதனால் ஆத்திரமடைந்த கள்ளக்காதலன் அவரை வழிமறித்து தாக்கியதாகவும் போலீஸ் விசாரணையில் கூறப்படுகிறது. இந்த வழக்கில் விவசாயியின் மனைவி மற்றும் அவரது ஆண் நண்பர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சூளகிரி அருகே குண்டுகுறுக்கி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜகோபால் (40). விவசாயியான இவர், கடந்த மாதம் 25-ம் தேதி இரவு மோட்டார் சைக்கிளில் சூளகிரியிலிருந்து தனது கிராமத்துக்கு சென்று கொண்டிருந்தார். பவர் கிரீட் அருகே சென்றபோது, அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று அவரது மோட்டார் சைக்கிளில் மோதியதாக கூறப்பட்டது. இதில் ராஜகோபால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து அவரது மனைவி ரூபா, சூளகிரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். முதற்கட்டமாக சாலை விபத்து என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தொடங்கினர்.
ஆனால் ராஜகோபாலின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக சிலர் போலீசாரிடம் தகவல் தெரிவித்தனர். குறிப்பாக, அவரது குடும்பத்தில் நிலவி வந்த உறவு தொடர்பான பிரச்சினையை விசாரணை அதிகாரிகள் கவனத்தில் எடுத்தனர். இதையடுத்து சம்பவம் நடந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் ராஜகோபால் வாகன விபத்தில் சிக்கி உயிரிழக்கவில்லை என்பதும், அவரை ஒருவர் இரும்புக் கம்பியால் தாக்கியிருப்பதும் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், ராஜகோபாலின் மனைவி ரூபாவுக்கும், அவர் பணியாற்றிய தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த ஒட்டையனூரைச் சேர்ந்த நந்தகுமார் (34) என்பவருக்கும் நெருக்கமான தொடர்பு இருந்ததாக தெரியவந்தது. இதை அறிந்த ராஜகோபால் தனது மனைவியை கண்டித்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று உடல்நிலை சரியில்லாத ரூபாவை ராஜகோபால் மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்று அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளித்துள்ளார். பின்னர் அவரை வீட்டில் விட்டுவிட்டு, உணவு வாங்குவதற்காக மீண்டும் வெளியே சென்றுள்ளார்.
இந்த தகவலை ரூபா, நந்தகுமாருக்கு தெரிவித்ததாக போலீஸ் விசாரணையில் கூறப்படுகிறது. இதையடுத்து ராஜகோபாலை பின்தொடர்ந்த நந்தகுமார், பவர் கிரீட் அருகே அவரை வழிமறித்து இரும்புக் கம்பியால் தாக்கியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதில் படுகாயமடைந்த ராஜகோபால் உயிரிழந்துள்ளார். சம்பவத்துக்குப் பிறகு எதுவும் நடக்காதது போல் ரூபாவும் நந்தகுமாரும் இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் போலீசாரின் தொடர் விசாரணையில் சம்பவத்தின் பின்னணி வெளிச்சத்துக்கு வந்தது.
இதையடுத்து கொலைக்கு உடந்தையாக இருந்ததாக ரூபாவையும், கொலை செய்ததாக கூறப்படும் நந்தகுமாரையும் போலீசார் கைது செய்தனர். இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். நந்தகுமாருக்கும் திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளதாகவும், ராஜகோபாலுக்கும் ரூபாவுக்கும் இரண்டு மகள்கள் இருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர். பெற்றோர் சிறையில் இருப்பதால் குழந்தைகள் உறவினர்களின் பராமரிப்பில் உள்ளனர்.
குடும்ப பிரச்சினை மற்றும் தகாத உறவு தொடர்பான விவகாரம், இறுதியில் விவசாயியின் உயிரையே பறித்த சம்பவம் சூளகிரி பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read: விபத்தில் உதவிய பெண்.. காதலாக மாறிய பழக்கம்! இறுதியில் நடந்த பயங்கரம்!



