தனது பெற்றோர்களிடமிருந்து குழந்தையை மறைக்க பெற்ற மகனையே கொலை செய்த கொடூர தந்தையை சென்னை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை தாம்பரம் பகுதியில் உள்ள பெரியார் நகரை சார்ந்தவர் வருண். இவர் விஜயலட்சுமி என்ற பெண்ணை காதலித்து வந்தார். காதலிக்கும் போது இருவரும் நெருங்கி பழகியதில் விஜயலட்சுமி கர்ப்பமானார். இதனைத் தொடர்ந்து விஜயலட்சுமியின் பெற்றோர் அவரை வருணுக்கு திருமணம் செய்து வைத்தனர். இந்தத் திருமணம் வருண் குடும்பத்தாருக்கு தெரியாது. இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. வருண் தனது மாமனாரின் பராமரிப்பில் இருந்து வந்தார். வருணுக்கு, மாமனார் வீட்டுடன் ஏதோ பிரச்சனை ஏற்படவே வருணின் பெற்றோர் வீட்டிற்கு செல்ல இருவரும் முடிவெடுத்தார். அவர்களின் குழந்தையை தனது தோழி மகாலட்சுமியின் பராமரிப்பில் சிறிது காலம் விட்டுச் செல்லலாம் என மனைவியிடம் கூறியிருக்கிறார் வருண். விஜயலட்சுமியை அழைத்துக் கொண்டு தனது வீட்டிற்குச் சென்ற போது வருண், இவர்தான் தனது காதலி என விஜயலக்ஷ்மியை பெற்றோரிடம் அறிமுகப்படுத்தி இருக்கிறார். அவரது பெற்றோரும் சம்மதித்து இவர்களுக்கு திருமணம் செய்து வைத்தனர்.
திருமணமான சில நாட்கள் கழித்து விஜயலட்சுமி தமது குழந்தையை இங்கேயே அழைத்து வந்துவிடலாம் என வருணிடம் கூறியிருக்கிறார். அதற்கு வருண் முன்னுக்கு பின் முரணான கருத்துக்களையே அவரிடம் தெரிவித்து வந்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த விஜயலட்சுமி வருணின் தோழி மகாலட்சுமியின் வீட்டை கண்டுபிடித்து அவரிடம் விசாரித்த போது குழந்தை அவரது பராமரிப்பில் மூன்று நாட்கள் மட்டுமே இருந்தது தெரிய வந்திருக்கிறது. இதனால் சந்தேகமடைந்த விஜயலட்சுமி இது குறித்து காவல் நிலையத்தில் புகார் செய்தார். இது தொடர்பாக காவல்துறையினர் வருணை பிடித்து விசாரித்ததில் அவர் தனது மகனை கொலை செய்ததை ஒப்பு கொண்டார். இது தொடர்பாக அவர் காவல்துறையிடம் கடந்த நவம்பர் மாதம் தனது குழந்தையை ஆளில்லாத இடத்திற்கு கூட்டிச்சென்று அதன் மூக்கு மற்றும் வாயை பொத்தி கொலை செய்து சுடுகாட்டுப் புதரில் வீசியதாக தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து அவரை கொலை வழக்கில் கைது செய்த காவல்துறை சுடுகாட்டுப் பகுதியில் இருந்து குழந்தையின் எலும்புக்கூடுகளையும் மீட்டிருக்கிறது .