டாஸ்மாக் கடைகளில் 21 வயதுக்குட்பட்டோருக்கு மது விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழ்நாட்டின் 18வது முதலமைச்சராக சி.ஜோசப் விஜய் பதவியேற்றுக் கொண்டார். பதவியேற்ற மறுகணமே தமிழ்நாட்டில் அனைத்து வீடுகளுக்கும் முதல் 200 யூனிட்டுகள் வரை கட்டணமில்லா மின்சாரம், பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப்படை, போதைப்பொருளை தடுக்க சிறப்பு நடவடிக்கை உள்ளிட்ட திட்டங்களை அமல்படுத்தும் கோப்புகளில் முதலமைச்சர் விஜய் கையெழுத்திட்டார்.
அதனைத்தொடர்ந்து மாநிலம் முழுவதும் உள்ள 717 டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூட உத்தரவிட்டார். அதன்படி கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பேருந்து நிலையங்கள் போன்ற முக்கிய பொதுமக்கள் கூடும் இடங்களிலிருந்து 500 மீட்டர் தூரத்திற்குள் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடைகளை இரண்டு வாரங்களுக்குள் மூட உத்தரவிட்டார்.
இந்த நிலையில் டாஸ்மாக் கடைகளில் 21 வயதுக்குட்பட்டோருக்கு மது விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக கடைப்பணியாளர்களுக்கு வெளியிட்டுள்ள எச்சரிக்கை அறிவிப்பில், தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் மதுக்கூடங்களில் 21 வயதிற்குட்பட்டவர்களுக்கு மது விற்பனை செய்யக் கூடாது.
மேலும் கடைகளுக்கு வரும் வாடிக்கையாளரின் வயதில் சந்தேகம் ஏற்பட்டால் அவர்களிடம் வயதிற்கான ஆதாரமான ஆதார் கார்டு, ஓட்டுநர் உரிமம் போன்ற ஏதேனும் உரிய ஆவணங்களை சரிபார்த்து 21 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கே மதுபானங்களை விற்பனை செய்ய வேண்டும். மேலும் 21 வயதிற்கு கீழ் உள்ள வாடிக்கையாளர்களுக்கு மதுபானங்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் அவர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவுறுத்தப்படுகிறது.



