தர்மபுரி கோட்டை கோயில் அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், 45 வயதான சந்தோஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். ரியல் எஸ்டேட் தொழிலுடன் பங்குசந்தை மற்றும் ஆன்லைன் டிரேடிங் செய்து வரும் இவருக்கு, 35 வயதான சரண்யா என்ற மனைவியும், 14 வயதான சாத்விகா என்ற மகளும் உள்ளனர். இவரது மகள், தனியார் பள்ளி ஒன்றில், விடுதியில் தங்கி 9ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று காலை வழக்கம் போல் சரண்யாவிற்கு அவரது பெற்றோர் போன் செய்துள்ளனர். ஆனால் அவர் நீண்ட நேரமாகியும் போனை எடுக்கவில்லை. இதனால் சற்று சந்தேகம் அடைந்த பெற்றோர், தனது மகளின் வீட்டிற்க்கு சென்றுள்ளனர். அப்போது, அங்கு சரண்யா மற்றும் அவரது மகள் சாத்விகா ஆகிய இருவரும் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்துள்ளனர்.
சம்பவம் குறித்து தர்மபுரி டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, தர்மபுரி எஸ்பி(பொ) மகேஸ்வரன் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். மேலும், தர்மபுரி அருகே புறவடை பகுதியில் லாரி முன் பாய்ந்து ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இது குறித்து நடத்திய விசாரணையில், தற்கொலை செய்து கொண்டது சந்தோஷ் என்பது உறுதி செய்யப்பட்டது.
மேலும், பங்குசந்தை மற்றும் ஆன்லைன் டிரேடிங் காரணமாக அதிகளவில் கடன் ஏற்பட்ட்டுள்ளது. அடமானம் வைத்த நகைகளையும் மீட்க முடியாமல் கடும் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இதனால் விரக்தி அடைந்த சந்தோஷ், தற்கொலை செய்துக்கொள்ள முடிவு செய்துள்ளார். ஆனால், தான் போன பிறகு மனைவியும், மகளும் கடன் தொல்லையால் சிரமப்படக் கூடாது என்று நினைத்த அவர் இருவரையும் கொலை செய்ய முடிவு செய்துள்ளார்.
அதன் படி, நேற்று காலை தனது மனைவியை பாத்ரூமிற்கு அழைத்து சென்று, சரமாரியாக தாக்கி கழுத்தை நெரித்துள்ளார். இதில் நிலைகுலைந்த சரண்யா நாக்கு வெளியே தள்ளியவாறு துடிதுடித்து உயிரிழந்தார். பின்னர், 10.30 மணியளவில் தாத்தா இறந்து விட்டதாக கூறி பள்ளியில் இருந்து தனது மகளை வீட்டிற்கு அழைத்து வந்து, சுத்தியலால் பலமாக மகளை தாக்கியுள்ளார். இதில், தலை சிதறி சாத்விகா உயிரிழந்தார்.
பின்னர் சந்தோஷ் லாரியில் பாய்ந்து தற்கொலை செய்துள்ளார். இந்நிலையில், சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், சந்தோஷ் தற்கொலை செய்வதற்கு முன்பு 5 வீடியோக்கள் அடுத்தடுத்து பதிவு செய்து வெளியிட்டுள்ளார். அதில் அவர், “நிறைய பேருக்கு நான் பணம் தர வேண்டும். ஏதோ வந்தா பார்த்துக்கங்க. ஒன்னும் பண்றதுக்கு இல்லை. முனிராஜ் ரியல் எஸ்டேட் செய்ய பணம் வாங்கி கொடுத்தார். அவரை யாரும் எதுவும் செய்யாதீங்க. என்னால முடியல.
விட்ருங்க. என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை. நான் தான் என் பொண்டாட்டி, பிள்ளையை கொன்றேன். எங்க அம்மாவை கொலை செய்ய வேண்டும் என நினைத்தேன். அதற்குள் மாமனார் பேசி விட்டார். அதனால் விட்டுவிட்டேன். மனைவி அக்கவுண்டில் ரூ.42 லட்சம் உள்ளது. இந்த தொகையை எடுத்து கடன் கொடுக்க வேண்டியவர்களுக்கு பிரித்துக் கொடுங்கள் என்று பெயரைக் கூறி, அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.
Also Read: “என் தாய்மை உணர்வுகள் விழித்துக் கொண்டது” கட்டா குஸ்தி 2க்கு பின் நடிகை அளித்த பேட்டி..



