கோவை இருகூர் அருகே 13 வயது சிறுவனை, சக வயது நண்பர்கள் மது பாட்டில் மற்றும் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை இருகூர் பகுதியைச் சேர்ந்த பாரதிராஜா, அப்பகுதி பேரூராட்சியில் தூய்மைப் பணியாளராக பணியாற்றி வருகிறார். இவருடைய மூத்த மகன் திவிஸ் (13), கடந்த 15-ஆம் தேதி மாலை முதல் திடீரென காணாமல் போனதாக கூறப்படுகிறது. இதனால் பதற்றமடைந்த பெற்றோர், பல்வேறு இடங்களில் தேடியும் சிறுவன் கிடைக்காததால் சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதையடுத்து வழக்குப் பதிவு செய்த போலீஸார், தீவிர விசாரணை மேற்கொண்டனர். திவிஸ் நண்பர்களுடன் விசாரணை மேற்கொண்டதில் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. தொடர்ந்து, இருகூர் ரயில்வே சிறிய மேடை அருகே உள்ள மறைவான பகுதியில் வீசப்பட்டிருந்த சிறுவனின் உடலை போலீஸார் மீட்டனர். பின்னர் உடல், உடற்கூறாய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில், கடந்த 15-ஆம் தேதி திவிஸ் தனது நண்பர்களுடன் இருகூர் பொங்காளியம்மன் கோவில் அருகே உள்ள கால்வாய்க்கு மீன் பிடிக்கச் சென்றுள்ளார். அப்போது சிறுவர்களுக்கு இடையே திடீரென தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் 13 மற்றும் 15 வயதுடைய இரு சிறுவர்கள், திவிஸை கல் மற்றும் மது பாட்டிலால் தாக்கியதாக தெரியவந்துள்ளது.
பலத்த காயமடைந்த திவிஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர். மேலும், சம்பவத்தை மறைக்க சிறுவனின் உடலை அதே பகுதியில் குழி தோண்டி புதைக்க முயன்றதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, கொலைச் சம்பவத்தில் தொடர்புடைய இரு சிறுவர்களையும் சிங்காநல்லூர் போலீஸார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



