தமிழ்நாட்டின் இயற்கை மற்றும் கனிம வளங்களை முறைகேடாக பினாமி பெயர்களில் குவாரி நடத்திச் சூறையாடுபவர்கள் எந்தத் தேர்தலிலும் வெற்றி பெற முடியாது என்றும், அவர்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும் என்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சட்டமன்றத்தில் எச்சரித்துள்ளார்.
சட்டப்பேரவையில் பேசிய அவர், அரசுக்கு சொந்தமான வளங்கள் பல அரசியல்வாதிகளின் பிடியில் உள்ளதாகவும், ஆளும் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் யாரும் இத்தகைய குவாரி தொழில்களில் ஈடுபடவில்லை என்றும் குறிப்பிட்டார். டாஸ்மாக் நிறுவனங்கள் மற்றும் மணல் குவாரிகளின் பின்னணியில் பினாமியாக செயல்படும் நபர்கள் மற்றும் அவர்களின் அரசியல் செல்வாக்கு குறித்து கேள்வி எழுப்பிய அவர், முறைகேடாக ஈட்டிய பணத்தின் மூலம் குடும்பத்தினர் பெயரில் கல்லூரிகளை நிறுவிவிட்டு, வெளியில் எதுவுமே இல்லாதது போல் நாடகமாடுவதாக குற்றம் சாட்டினார்.
குறிப்பாக, அனுமதிக்கப்பட்ட அளவைத் தாண்டி பல மடங்கு ஆழத்திற்குச் சட்டவிரோதமாகக் கற்களையும் கனிமங்களையும் வெட்டி எடுக்கும் நபர்கள் மீது முதலமைச்சர் விரைவில் அபராதம் விதிப்பதுடன் கைது நடவடிக்கைகளையும் மேற்கொள்வார் என தெரிவித்தார். மேலும், பினாமிகளின் கட்டுப்பாட்டில் உள்ள இயற்கை வளங்களை மீட்டு மக்கள் சொத்தாக மாற்ற வேண்டும் என்றும், முறைகேட்டில் ஈடுபடுவோரின் உண்மை முகத்தை மக்கள் மன்றத்தில் ஆதாரத்துடன் அம்பலப்படுத்தினாலே போதும், மதுரை முன்னாள் அமைச்சர் டெபாசிட் இழந்ததைப் போல மக்கள் அவர்களுக்குத் தேர்தலில் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்றும் அவர் கூறினார். அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.


