சுதந்திர தின விழாவில் நடிகை த்ரிஷாவின் பங்கேற்பு தற்போது அரசியல் மற்றும் திரையுலக வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது. சென்னை கோட்டை கொத்தளத்தில் நடைபெற்ற விழாவில் அவர் முதல் வரிசையில் அமர்ந்திருந்த நிலையில், இதனை நடிகை கஸ்தூரி கடுமையாக விமர்சித்துள்ளார். தனது எக்ஸ் பக்கத்தில் கஸ்தூரி வெளியிட்ட பதிவு தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது. சென்னை கோட்டை கொத்தளத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் தமிழக முதல்வர் விஜய் தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்தினார்.
முதல்வராக பொறுப்பேற்ற பிறகு அவர் பங்கேற்ற முதல் சுதந்திர தின விழா என்பதால், நிகழ்ச்சி மீது அரசியல் வட்டாரத்திலும் பொதுமக்கள் மத்தியிலும் அதிக எதிர்பார்ப்பு நிலவியது. இந்த நிகழ்ச்சியில் நடிகை த்ரிஷாவும் கலந்து கொண்டார். விழாவின்போது அவர் முதல் வரிசையில் அமர்ந்து நிகழ்ச்சியை பார்வையிட்டார். நிகழ்ச்சி முடிந்து விஜய் அங்கிருந்து புறப்பட்டபோது, த்ரிஷாவை நோக்கி சல்யூட் செய்து கையசைத்துச் சென்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவின.
விஜய் மற்றும் த்ரிஷா இருவரும் ஒன்றாக இடம்பெற்ற சில முந்தைய நிகழ்வுகளும் தற்போது மீண்டும் சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகின்றன. விஜய் முதல்வராக பதவியேற்ற நிகழ்ச்சியில் த்ரிஷா தனது தோழி அர்ச்சனா கல்பாத்தியுடன் பங்கேற்றிருந்தார். அதேபோல், நடிகர் அஜித்குமாரின் தாயார் மறைவின்போது விஜய் நேரில் ஆறுதல் தெரிவித்த நிகழ்விலும் த்ரிஷா உடனிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், விஜய்யின் பிறந்தநாளுக்கு அடுத்த நாள் த்ரிஷா கேக் வெட்டிய புகைப்படம் ஒன்றை சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்ததும் தற்போது மீண்டும் கவனத்திற்கு வந்துள்ளது. இதனிடையே, விஜய்யின் குடும்ப வாழ்க்கை தொடர்பாக சமூக வலைதளங்களில் ஏற்கனவே பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வந்த நிலையில், சுதந்திர தின விழாவில் த்ரிஷாவின் பங்கேற்பு புதிய விவாதத்தை உருவாக்கியுள்ளது.
இந்த சூழலில் நடிகை கஸ்தூரி தனது எக்ஸ் பக்கத்தில், சுதந்திர தின விழாவில் நடைபெற்றது குறித்து கடுமையான விமர்சனத்தை பதிவு செய்துள்ளார். வெளிப்படையாக நடந்தாலும், அதுகுறித்து பேச பலரும் தயங்கினாலும், தவறு தவறுதான் என்ற கருத்தை தனது பதிவில் அவர் தெரிவித்துள்ளார். கஸ்தூரியின் இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. குறிப்பாக தவெக ஆதரவாளர்கள் மத்தியில் இந்த பதிவு விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read: விஜய் அரசியலில் வெற்றி… அடுத்து யாஷா? அரசியல் என்ட்ரி குறித்து ‘கேஜிஎஃப்’ ஹீரோ சொன்ன பதில்..



