தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் கடைசி படமாக உருவாகியுள்ள ‘ஜன நாயகன்’, இந்த ஆண்டில் உலகளவில் அதிக வசூல் செய்த தமிழ் படமாக புதிய சாதனை படைத்துள்ளது. உலகளாவிய வசூலில் சூர்யா நடிப்பில் வெளியான ‘கருப்பு’ படத்தை பின்னுக்குத் தள்ளி இந்தப் படம் முதலிடத்தை பிடித்துள்ளதாக சமீபத்திய வர்த்தகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான ‘ஜன நாயகன்’ திரைப்படம் உலகம் முழுவதும் இதுவரை ரூ.312.86 கோடி வசூல் செய்துள்ளதாக தொழில்துறை வசூல் தரவுகளை வெளியிட்டு வரும் Sacnilk தெரிவித்துள்ளது.
இதன் மூலம் ரூ.310.12 கோடி வசூல் செய்திருந்த சூர்யாவின் ‘கருப்பு’ படத்தின் உலகளாவிய வசூலை இப்படம் கடந்துள்ளது. இருப்பினும், இந்திய அளவிலான வசூல் சாதனையில் ‘கருப்பு’ திரைப்படமே தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. அந்தப் படம் இந்தியாவில் ரூ.228.97 கோடி மொத்த வசூலையும், ரூ.198.18 கோடி நிகர வசூலையும் பெற்றுள்ளது. ‘ஜன நாயகன்’ இந்தியாவில் ரூ.220.69 கோடி மொத்த வசூலும், ரூ.189.33 கோடி நிகர வசூலும் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, ‘ஜன நாயகன்’ திரைப்படத்தின் வசூலில் தொடர்ந்து ஏற்றம் காணப்படுகிறது. வெளியான 17-வது நாளான சனிக்கிழமை மட்டும் இப்படம் ரூ.2.35 கோடி வசூல் செய்துள்ளது. முந்தைய நாளான வெள்ளிக்கிழமை ரூ.1 கோடி வசூல் செய்திருந்த நிலையில், சனிக்கிழமை வசூல் சுமார் 135 சதவீதம் அதிகரித்துள்ளதாக Sacnilk தரவுகள் தெரிவிக்கின்றன. அரசியல் பின்னணியுடன் உருவாகியுள்ள ஆக்ஷன் திரைப்படமான ‘ஜன நாயகன்’ படத்தில் விஜய்யுடன் பாபி தியோல், மமிதா பைஜு, பிரகாஷ் ராஜ், பூஜா ஹெக்டே உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
படத்தில் முன்னாள் காவல் அதிகாரியாக விஜய் நடித்துள்ளார். தனது வளர்ப்பு மகளை பாதுகாப்பதற்காகவும், ஊழல் நிறைந்த அரசியல் மற்றும் பெருநிறுவன அமைப்புகளுக்கு எதிராக போராடுவதையும் மையமாகக் கொண்டு கதை நகர்கிறது. விஜய்யின் திரையுலகப் பயணத்தில் முக்கியமான படமாக பார்க்கப்படும் ‘ஜன நாயகன்’, ஜூலை 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. உலகளாவிய வசூலில் இந்த ஆண்டின் அதிக வசூல் செய்த தமிழ் படமாக இப்படம் முன்னிலை பெற்றிருப்பது விஜய் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read: வேறொரு ஆணுடன் பழகிய காதலி.. ஆசைவார்த்தை கூறி அழைத்த காதலன் செய்த கொடூரம்!



