சட்டசபையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பைத் தொடர்ந்து, முதலமைச்சர் விஜய் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இடையேயான அரசியல் மோதல் சமூக வலைதளங்களில் பெரிய விவாதமாக மாறியுள்ளது. நம்பிக்கை வாக்கெடுப்புக்கு பின் இருவரும் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவுகள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தின.
இதனைத் தொடர்ந்து, “சட்டசபையில் உண்மையில் சம்பவம் செய்தது யார்..? விஜய்யா அல்லது உதயநிதியா?” என்ற கேள்வி இணையத்தில் எழுந்துள்ளது. ஒருபுறம் தவெக ஆதரவாளர்கள் விஜயின் நடவடிக்கைகளை ஆதரித்து மீம்ஸ்கள் மற்றும் பதிவுகளை பகிர்ந்து வருகின்றனர். மறுபுறம் திமுக ஆதரவாளர்களும் உதயநிதி ஸ்டாலினுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
இதனால் எக்ஸ், பேஸ்புக் மற்றும் யூடியூப் உள்ளிட்ட தளங்களில் அரசியல் விவாதம் சூடுபிடித்துள்ளது. இந்த விவகாரம் குறித்து மூத்த பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே தெரிவித்த கருத்துகளும் தற்போது கவனம் ஈர்த்துள்ளன. திமுக கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் தான் தவெக ஆட்சி அமைந்துள்ளது என உதயநிதி கூறியது கருத்து தெரிவித்த பாண்டே, 144 எம்.எல்.ஏக்கள் தவெக ஆட்சிக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள்.
திமுக கூட்டணி கட்சிகள் ஆதரவை வாபஸ் வாங்கினால் கூட தவெகவால் ஆட்சி அமைக்க முடியும். இவ்வளவு பேசிய உதயநிதி நேற்று ஏன் தங்கள் எதிர்ப்பை தெரிவிக்காமல் வெளி நடப்பு செய்தார். வெளி நடப்புக்கு அவசியமே இல்லையே. எதிர்ப்பு வெறும் 22 தான். எதிர்ப்பை விட ஐந்து மடங்கு ஆதரவு உள்ளது. திமுக கூட்டணி கட்சிகளின் ஆதரவு இல்லாமலையே தவெகவால் ஆட்சி அமைக்க முடியும் என்றார்.
ரீல் ஆட்சி போல் இல்லாமல் ரியல் ஆட்சியை காட்டுங்கள் என்ற உதயநிதியின் விமர்சனத்திற்கு பதில் அளித்த பாண்டே, ரியல் ஆட்சியை தான் காட்டிட்டாரே. 10 சீட் கூட ஜெயிக்க முடியாதுனு சொன்னோம். 108 சீட் ஜெயிச்சிட்டாரு, ஆட்சிக்கு வர முடியாதுனு சொன்னோம். வந்துட்டாரு. பெரும்பான்மையை நிரூபிக்க முடியாதுனு சொன்னோம். நிரூபிச்சிட்டாரு. இதைவிட வேற என்ன செய்ய வேண்டும் என்றார்.
மாற்றம் இல்லை துர்நாற்றம் என டிடிவி தினகரன் கூறியதற்கு பதிலளித்த பாண்டே, தவெக சொன்னது ஆட்சி மாற்றம் தான்.. ஆட்சியை தக்க வைக்க திமுக என்ன செய்ததோ, அதிமுக என்ன செய்யுமோ அதை தான் தவெகவும் செய்திருக்கிறது. இதில் பெரிய தவறு ஒன்றும் இல்லை என்றார்.
உதயநிதியின் விமர்சனத்திற்கு சட்டப்பேரவையில் பதில் சொல்லாமல் எக்ஸ் பக்கத்தில் விமர்சித்தது குறித்த கேள்விக்கு, பதிலுக்கு பதில் பேசுவதற்கான இடம் சட்டப்பேரவை அல்ல. அதற்கு என்று ஒரு மரபு உள்ளது. நேற்று நடந்தது நம்பிக்கை கோரும் தீர்மானம். விவாத மேடை அல்ல. விஜய் அந்த அரசியல் மாண்பை கடைப்டித்துள்ளார் என்றார்.
Read more: ‘திராவிடம்’ என்றால் என்ன..? தமிழக அரசியலில் இந்த சொல்லுக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம்..?



