இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பருவமழை விலகும் காலகட்டத்தில் வானிலை மீண்டும் தீவிரமடையத் தொடங்கியுள்ளது. அடுத்த சில மணி நேரங்களில் சுமார் 20 மாநிலங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் என்றும், இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சில பகுதிகளில் மணிக்கு 50 முதல் 60 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். இதனுடன் மின்னல் மற்றும் திடீர் இடியுடன் கூடிய மழைக்கும் வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. டெல்லி, உத்தரப் பிரதேசம், பீகார், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் வானிலை நிலையற்றதாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
தலைநகர் டெல்லியில் நாள் முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படக்கூடும். நகரின் பல பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32 முதல் 33 டிகிரி செல்சியஸ் வரையிலும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 முதல் 26 டிகிரி செல்சியஸ் வரையிலும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சில இடங்களில் மணிக்கு 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றும் வீசக்கூடும்.
உத்தரப் பிரதேசத்தில் காசியாபாத், ஆக்ரா, லக்னோ, கான்பூர், மீரட், சஹாரன்பூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். லக்னோவில் அதிகபட்ச வெப்பநிலை சுமார் 33 டிகிரி செல்சியஸாக இருக்கும் நிலையில், மாநிலத்தின் சில பகுதிகளில் பலத்த காற்று வீசுவதற்கும் வாய்ப்புள்ளது.
மத்தியப் பிரதேசத்திலும் வானிலை மீண்டும் தீவிரமடையக்கூடும். போபால், இந்தூர், சாகர், நர்மதாபுரம், உஜ்ஜைன் உள்ளிட்ட பகுதிகளில் கனமழையுடன் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். போபாலில் அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸாகவும் இருக்கலாம். சில பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 55 கி.மீ. வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
ராஜஸ்தானிலும் பல பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. ஜெய்ப்பூர், கோட்டா, உதய்பூர், பார்மர், பரத்பூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்யக்கூடும். ஜெய்ப்பூரில் வெப்பநிலை சுமார் 30 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பீகாரிலும் கனமழை மற்றும் மின்னலுக்கு வாய்ப்புள்ளதால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கிழக்கு சம்பாரண், மேற்கு சம்பாரண், சீதாமர்ஹி, மதுபானி, பாட்னா, ரோஹ்தாஸ் உள்ளிட்ட 17 மாவட்டங்களில் கனமழை மற்றும் மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும்.
குஜராத்தின் பல பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அகமதாபாத், காந்திநகர், ராஜ்கோட், ஜாம்நகர், துவாரகா உள்ளிட்ட பகுதிகளில் வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தென் இந்தியாவிலும் சில பகுதிகளில் மழையுடன் பலத்த காற்று வீசக்கூடும். தமிழகத்தில் வேலூர், சேலம், மதுரை உள்ளிட்ட பகுதிகளில் மணிக்கு 50 கி.மீ. வேகத்தில் காற்று வீசுவதுடன் மழை பெய்யக்கூடும்.
அருணாச்சலப் பிரதேசத்திலும் வானிலை மோசமடையக்கூடும். அப்பர் சியாங், லோஹித், பாபும் பாரே உள்ளிட்ட பகுதிகளில் கனமழையுடன் பலத்த காற்று வீசக்கூடும். சில இடங்களில் காற்றின் வேகம் மணிக்கு 60 கி.மீ. வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
முக்கிய நகரங்களின் வெப்பநிலையைப் பொறுத்தவரை, கொல்கத்தாவில் அதிகபட்சம் 35 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சம் 27 டிகிரி செல்சியஸ்; சென்னையில் 32 மற்றும் 27 டிகிரி செல்சியஸ்; மும்பையில் 31 மற்றும் 26 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகலாம். ராஞ்சியில் 29 மற்றும் 22 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், சிம்லாவில் 22 மற்றும் 16 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் நிலவக்கூடும். நைனிடாலில் அதிகபட்சம் 23 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்சம் 17 டிகிரி செல்சியஸாகவும் இருக்கலாம்.
இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த காற்று வீசும் நேரங்களில் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. குறிப்பாக மரங்கள், மின்கம்பங்கள் மற்றும் வலுவற்ற கட்டிடங்களின் அருகில் நிற்பதை தவிர்க்க வேண்டும் என்றும், மோசமான வானிலை நிலவும் நேரங்களில் தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது பாதுகாப்பானது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Also Read: பண்டிகை முடிந்து வீடு திரும்பிய குடும்பம்.. பின்னால் வந்து மோதிய பால் டேங்கர்; 9 வயது சிறுமி உட்பட 3 பேர் பலி!



