திருமணம் முடிந்து ஒரு மாதமே ஆன நிலையில், கோழிப்பண்ணை உரிமையாளர் ஒருவரின் வீட்டுக்கு வந்த கூரியர் பார்சல் அவரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பார்சலைத் திறந்தபோது பல்வேறு வகையான போதைப்பொருட்கள் இருந்த நிலையில், போலீஸார் நடத்திய விசாரணையில் அந்தப் பார்சலின் பின்னணியில் அவரது மனைவிக்கும் மற்றொருவருக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 4 கிலோ கொக்கைன், 80 கிராம் சரஸ் மற்றும் தடை செய்யப்பட்ட மனநல மாத்திரைகள் உள்ளிட்ட பொருட்கள் அந்தப் பார்சலில் இருந்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
சர்வதேச சந்தையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ளதாகக் கூறப்படும் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து, கந்தர்பால் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். விசாரணையின் போது, பார்சலில் போதைப்பொருட்கள் இருப்பது தனக்கு முன்கூட்டியே தெரியாது என்று அந்த இளைஞர் தெரிவித்துள்ளார். சவுதி அரேபியாவில் இருந்து ஒருவர் தன்னை தொடர்புகொண்டு, குறைந்த விலையில் கோழித்தீவனம் வழங்குவதாகவும், அதற்கான மாதிரியை கூரியரில் அனுப்புவதாகவும் கூறியதாக அவர் போலீஸாரிடம் தெரிவித்துள்ளார். அந்த தகவலை நம்பியே பார்சலை பெற்றதாகவும் அவர் கூறியுள்ளார்.
அதேநேரத்தில், திருமணத்துக்கு முன்பாக இதே எண்ணில் இருந்து தனக்கு அழைப்புகள் வந்ததாகவும், திருமணத்தை நிறுத்துமாறு தன்னை மிரட்டியதாகவும் அந்த இளைஞர் தெரிவித்துள்ளார். இந்த தகவல் போலீஸாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியதால், அவரது செல்போன் தொடர்புகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அப்போது, அவரது மனைவிக்கு திருமணத்துக்கு முன்பே ஸ்ரீநகர் ஜைனகோட் பகுதியைச் சேர்ந்த 51 வயதான தாரிக் அகமது சோஃபி என்பவருடன் தொடர்பு இருந்ததாக போலீஸார் கூறுகின்றனர். அவர் அரசு ஊழியர் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
பெற்றோரின் வற்புறுத்தலின் காரணமாகவே கோழிப்பண்ணை உரிமையாளரை அந்தப் பெண் திருமணம் செய்துகொண்டதாகவும், திருமணத்திற்குப் பிறகும் தாரிக் அகமதுவுடன் தொடர்பில் இருந்ததாகவும் போலீஸ் விசாரணையில் தகவல் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கணவரை போதைப்பொருள் வழக்கில் சிக்கவைத்து சிறையில் அடைக்க இருவரும் திட்டமிட்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். இதற்காக தாரிக் அகமது, கான்பூரில் வசிக்கும் தனது நண்பர் அரீப்பின் உதவியை நாடியதாக கூறப்படுகிறது.
அரீப் மூலம் போதைப்பொருட்களைப் பெற்ற தாரிக் அகமது, அவற்றை கோழித்தீவனம் என்ற பெயரில் கணவரின் முகவரிக்கு கூரியர் செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். பார்சல் சென்றடைந்ததும், அதில் போதைப்பொருட்கள் இருப்பதாக தகவல் கொடுத்து கணவரை சட்டரீதியாக சிக்கவைக்க திட்டமிட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக கோழிப்பண்ணை உரிமையாளரின் மனைவி மற்றும் தாரிக் அகமது சோஃபி ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்துள்ளனர். போதைப்பொருட்களை ஏற்பாடு செய்து அனுப்பியதாக கூறப்படும் அரீப், தற்போது சவுதி அரேபியாவுக்கு தப்பிச் சென்றிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இந்த சதித்திட்டத்தில் மேலும் யாருக்கேனும் தொடர்பு உள்ளதா, போதைப்பொருட்கள் எங்கிருந்து பெறப்பட்டன என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



