சத்திஸ்கர் மாநிலத்தில் உள்ள துர்க் மாவட்டத்தில், இளம்பெண் ஒருவரின் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பெண்ணின் உடலில் பலத்த காயங்கள் இருந்ததையடுத்து, அவர் பலாத்காரம் செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகித்தனர். பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்தனர்.
சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் வேலை முடிந்து வீட்டுக்குச் சென்றுகொண்டு இருந்த பெண் கொல்லப்பட்டது தெரியவந்துள்ளது. அவரை இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றதாக ரைஸ் மில் தொழிலாளி 19 வயதான ஹரிஷ் யாதவ், 20 வயதான மெக்கானிக் நிதீஷ் தாகூர் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். சம்பவத்தன்று மதுபோதையில் இருந்த இருவரும், பேருந்து நிறுத்தத்தில் இருந்த பெண்ணை நோட்டமிட்டுள்ளனர்.
பின்னர் அவரிடம் சென்று, சிறிய வேலை ஒன்று இருப்பதாகவும் அதற்கு கூலி கொடுப்பதாகவும் கூறி அந்தப் பெண்ணை இருவரும் அழைத்துள்ளனர். அதற்கு அந்தப் பெண்ணும், சம்பளம் கிடைக்கும் என்ற எண்ணத்தில் அவர்களுடன் சென்றுள்ளார். இந்த சந்தர்ப்பத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட இருவரும், அந்தப் பெண்ணை மேம்பாலத்துக்கு கீழ் உள்ள மறைவான பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்துள்ளனர்.
இதனால் அதிர்ந்து போன அந்தப் பெண், இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வாலிபர்கள் இருவரும் அந்தப் பெண்ணை கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயம் அடைந்த அந்தப் பெண், பரிதாபமாக உயிரிழந்தார். அவர் உயிரிழந்ததை அறிந்த வாலிபர்கள் இருவரும் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். 300 வது சிசிடிவி கேமிராவும், ரிக்சா ஓட்டுநர் கொடுத்த தகவலும் ஆதாரமாக சேர்க்கப்பட்ட நிலையில், போலீசார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Also Read: தினமும் இரவு இதை சாப்பிட்டு தூங்கிப் பாருங்க… மாற்றம் உங்களுக்கே தெரியும்!



