நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ்வரி. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, இவருக்கும் விழிஞ்ஞத்தைச் சேர்ந்த அபிலாஷ் என்பவருக்கும் திருமணம் முடிந்துள்ளது. திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆகியும் இவர்களுக்கு குழந்தை இல்லை. இந்நிலையில், சம்பவத்தன்று விக்னேஷ்வரி அவரது கணவர் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
வழக்கம் போல், விக்னேஷ்வரியின் மாமனார் சந்திரன், மாலை வீட்டிற்கு வந்துள்ளார். கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்த நிலையில், அவர் கதவை தட்டியுள்ளார். ஆனால் வெகு நேரமாகியும் கதவை திறக்காததால் சந்தேகம் அடைந்த சந்திரன், ஜன்னல் வழியாக உள்ளே பார்த்துள்ளார். அப்போது, விக்னேஷ்வரி தூக்கில் பிணமாக தொங்கியதை பார்த்து பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
சம்பவம் கூறித்து போலீசாருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், விக்னேஷ்வரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆரம்ப விசாரணையில் தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை என்று கூறப்பட்ட நிலையில், விக்னேஷ்வரியின் உறவினர்கள், கணவர் குடும்பத்தினரால் தொடர்ந்து துன்புறுத்தப்பட்டதாக புகார் அளித்துள்ளனர்.
இதையடுத்து, போலீசார் சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்போது, விக்னேஷ்வரி எழுதியதாகக் கூறப்படும் கடிதம் போலீசாரால் மீட்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த கடிதத்தில், தனது கணவர் மதுபோதையில் அடிக்கடி உடல் ரீதியாக துன்புறுத்தியதாகவும், அதனால் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் குறிப்பிடப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
இந்த தகவல்களின் அடிப்படையில், போலீசார் அபிலாஷ் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். திருமணம் ஆன, 2 ஆண்டுகளில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


