வாடகைக்கு வீடு எடுத்து தனியாக வசிக்கும் பெண்களின் பாதுகாப்பு குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்து வரும் நிலையில், பெங்களூருவில் வீட்டு உரிமையாளரே 20 வயது கல்லூரி மாணவியிடம் அத்துமீறி நடந்துகொண்டதாக எழுந்துள்ள புகார் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் 60 வயது வீட்டு உரிமையாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெங்களூரு சாந்திநகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 20 வயது மாணவி ஒருவர் கடந்த இரண்டரை மாதங்களாக வாடகைக்கு வசித்து வருகிறார். தனியார் பல்கலைக்கழகத்தில் 3-ம் ஆண்டு படித்து வரும் அவர், சம்பவம் நடந்த நாளில் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி மாலை, வீட்டில் சில பழுதுபார்ப்பு பணிகள் செய்ய வேண்டியிருப்பதாக கூறி, வீட்டு உரிமையாளர் கமலேஷ் குமார் மாணவியின் வீட்டுக்குள் சென்றுள்ளார். பழுதுபார்க்க வேண்டிய பகுதிகளை பார்வையிட்ட பிறகு, மாணவியிடம் அவரது கல்லூரி மற்றும் தனிப்பட்ட விஷயங்கள் குறித்து பேசியுள்ளார்.
அப்போது மாணவியின் கையில் இருந்த மருதாணியை பார்த்த கமலேஷ் குமார், அவரது கையை பிடித்துள்ளார். மாணவி தனது கையை விடுவிக்க முயன்றபோதும், அவர் மாணவியை தன்னை நோக்கி இழுத்து அணைத்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கமலேஷ் குமார் அவரது இரு கன்னங்களிலும் முத்தமிட்டு அத்துமீறியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், மாணவியுடன் அதிக நேரம் செலவிட விரும்புவதாகவும் அவர் தெரிவித்துவிட்டு அங்கிருந்து சென்றதாக மாணவி போலீசில் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த மாணவி உடனடியாக அசோக் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் கமலேஷ் குமார் மீது பெண்களின் கண்ணியத்தை அவமதிக்கும் வகையில் செயல்பட்டது மற்றும் பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதையடுத்து கமலேஷ் குமாரிடம் போலீசார் விசாரணை நடத்தி, சட்டப்படி நோட்டீஸ் வழங்கியுள்ளனர். இதற்கிடையே, மாணவி தெரிவித்த குற்றச்சாட்டுகளை கமலேஷ் குமார் மறுத்துள்ளார். வாடகை பாக்கி தொடர்பாக மாணவியிடம் கேள்வி கேட்டதால், பழிவாங்கும் நோக்கில் தன் மீது பொய்யான புகார் அளித்ததாக அவர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
இரு தரப்பினரின் வாக்குமூலங்களையும் பதிவு செய்துள்ள போலீசார், சம்பவம் தொடர்பான ஆதாரங்களை சேகரித்து விசாரணையை தொடர்ந்து வருகின்றனர்.
Also Read: சினிமா ரசிகர்களுக்கு ஷாக்! செப்டம்பர் 1 முதல் புதிய படங்கள் ரிலீஸ் இல்லை!



