கோவை, ஈரோடு மாவட்டங்களில் முதல்வர் ஸ்டாலின் வரும் 25, 26-ம் தேதிகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு, பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
கோவை காந்திபுரம் நஞ்சப்பா சாலையில் உள்ள சிறைச்சாலை வளாகத்தில் 45 ஏக்கர் பரப்பில் ரூ.208.50 கோடியில் செம்மொழிப் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. வரும் 25-ம் தேதி இப்பூங்காவை மக்கள் பயன்பாட்டுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைக்கிறார். மேலும், அன்று மாலை கோவை சின்னியம்பாளையத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் தொழில் துறை சார்பில் நடைபெறும் ‘டி.என்-ரைஸ்’ என்ற நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
வரும் 26-ம் தேதி காலை ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி ஜெயராமபுரத்தில் ரூ.4.90 கோடியில் அமைக்கப்பட்டுள்ள சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் பொல்லானின் சிலையுடன் கூடிய அரங்கை முதல்வர் திறந்துவைக்கிறார். ஓடாநிலையில் அமைந்துள்ள சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் மணி மண்டப வளாகத்துக்குச் சென்று, மரியாதை செலுத்துகிறார். பின்னர், ஈரோடு மாவட்டம் சோலார் புதிய பேருந்து நிலையவளாகத்தில் நடைபெறவுள்ள அரசு விழாவில் ரூ.605 கோடியில் முடிவுற்ற திட்டப் பணிகளைத் திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். அதேபோல, 1,84,491 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
சித்தோடுபால் பண்ணை வளாகத்தில் ரூ.50 லட்சம் மதிப்பில் நிறுவப்பட்டுள்ள, பால்வளத் துறையின் தந்தை என்று போற்றப்படும் சி.கு.பரமசிவம் சிலையையும் திறந்து வைக்கிறார்.இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதல்வர் ஸ்டாலின் வரும் 25-ம் தேதி காலை சென்னையிலிருந்து விமானம் மூலம் கோவை வருகிறார். கோவையில் நடைபெறும் நிகழ்ச்சிகளில்பங்கேற்ற பின்னர் இரவு ஈரோடு சென்று தங்குகிறார்.



