தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, அரசியல் களத்தில் கூட்டணி பேச்சுவார்த்தைகள் வேகமெடுத்துள்ளன. தேர்தல் முடிவுகளின்படி, மொத்தம் 234 உறுப்பினர்கள் கொண்ட சட்டசபையில் ஆட்சி அமைக்க குறைந்தபட்சமாக 118 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தேவை. தற்போது தவெக 108 இடங்களை கைப்பற்றியுள்ளது. இதனால், மேலும் 10–11 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவைப்படும் நிலை உருவாகியுள்ளது.
இந்த சூழ்நிலையில் சிறிய கட்சிகள் மற்றும் சுயேச்சை எம்.எல்.ஏக்களின் நிலைப்பாடு மிகவும் முக்கியமாக மாறியுள்ளது. குறிப்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 2 எம்.எல்.ஏக்களின் ஆதரவும் கூட்டணி கணக்கில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) கட்சிக்கு தவெக அதிகாரப்பூர்வமாக கூட்டணிக்கு அழைப்பு விடுத்து கடிதம் அனுப்பியுள்ளது.
தவெக அனுப்பிய கூட்டணி அழைப்பை பெற்றுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இது குறித்து நாளை மறுநாள் நடைபெறும் செயற்குழு கூட்டத்தில் விவாதிக்க உள்ளது. அந்தக் கூட்டத்தில் தான் கூட்டணியில் சேரலாமா வேண்டாமா என்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கு முன்பாகவும் காங்கிரஸ் கட்சியிடமும் ஆதரவு கோரியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோல், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அடுத்த கட்டமாக, தவெக மற்ற கட்சி எம்எல்ஏக்களின் ஆதரவை பெற முயற்சிக்குமா என்பது அரசியல் வட்டாரங்களில் கவனமாக பார்க்கப்படுகிறது.



