தமிழக அரசியலில் தவெக ஆட்சி அமைப்பது தொடர்பான பரபரப்பு அதிகரித்துள்ள நிலையில், புதுச்சேரியில் தங்க வைக்கப்பட்டிருந்த அதிமுக எம்.எல்.ஏக்கள் தற்போது சென்னைக்கு திரும்பி வருவது புதிய அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று நடைபெற உள்ள அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
2026 சட்டமன்றத் தேர்தலில் விஜய் தலைமையிலான தவெக 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஆனால் ஆட்சியமைக்க தேவையான முழு பெரும்பான்மை இன்னும் கிடைக்காததால், கூட்டணி கணக்குகள் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கின்றன.
இந்த சூழலில், 30-க்கும் மேற்பட்ட அதிமுக எம்.எல்.ஏக்கள் கடந்த இரண்டு நாட்களாக புதுச்சேரி ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். “குதிரை பேர” அரசியலைத் தவிர்க்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து எடப்பாடி பழனிசாமி நேரடியாக புதுச்சேரி சென்று எம்.எல்.ஏக்களுடன் முக்கிய ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகின.
தற்போதைய அரசியல் சூழல், தவெக ஆட்சியமைப்பதற்கான முயற்சிகள் மற்றும் திமுகவின் நகர்வுகள் குறித்து இந்த சந்திப்பில் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதேநேரத்தில், திமுக வெளியில் இருந்து அதிமுகவுக்கு ஆதரவு அளிக்கலாம் என்ற தகவலும் அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது. இதை திமுக மறுத்திருந்தாலும், அதிமுக தரப்பில் நேரடி விளக்கம் வெளியாகவில்லை.
இந்த நிலையில், இன்று நடைபெறும் அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எடப்பாடி பழனிசாமி ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோருவாரா அல்லது எதிர்க்கட்சியாக செயல்படுவதாக அறிவிப்பாரா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
இதற்கிடையில், தவெக ஆட்சிக்கு வந்தால் அதிமுகவின் எதிர்கால அரசியல் பாதிக்கப்படும் என்ற அச்சம் கட்சிக்குள் இருப்பதாக கூறப்படுகிறது. ஆளுநர் இதுவரை எந்த தரப்பையும் ஆட்சியமைக்க அழைக்காததால், தமிழக அரசியல் தொடர்ந்து பரபரப்பான கட்டத்தில் உள்ளது.



