நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களை கைப்பற்றி தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. காங்கிரஸ், விசிக, சிபிஐ, சிபிஎம், ஐயுஎம்எல் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்த நிலையில், சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற விழாவில் ஆளுநர் ஆர்.என். ரவீந்திரநாத் அர்லேகர் தமிழக முதலமைச்சராக விஜய்க்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். தொடர்ந்து 9 அமைச்சர்களும் பதவியேற்றனர்.
இதன் தொடர்ச்சியாக, சட்டமன்றத்தின் தொடக்க நடைமுறையாக தற்காலிக சபாநாயகர் பதவியேற்பு விழா இன்று ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் முதலமைச்சர் விஜய் நேரில் பங்கேற்றார். விழாவில் சோழவந்தான் தொகுதி எம்.எல்.ஏ கருப்பையாவுக்கு தற்காலிக சபாநாயகராக ஆளுநர் ஆர்.என். ரவீந்திரநாத் அர்லேகர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
சட்டமன்ற நடைமுறைகளின்படி, புதிதாக தேர்வான அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களின் பதவியேற்பு விழா நாளை காலை 9.30 மணிக்கு நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து, சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தேர்வு தொடர்பான தேர்தலும் நடைபெறவுள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில், தற்காலிக சபாநாயகராக பொறுப்பேற்றுள்ள கருப்பையா குறித்து அரசியல் வட்டாரங்களில் கவனம் அதிகரித்துள்ளது.
யார் இந்த கருப்பையா? மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள வாவிடமருதூரைச் சேர்ந்த கருப்பையா, 1980-ம் ஆண்டிலிருந்து அதிமுக உறுப்பினராக இருந்து வருகிறார். மீனவரணி ஒன்றிய செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். 2011-ம் ஆண்டு அதிமுக சார்பில் சோழவந்தான் தொகுதியில் போட்டியிட்டு 36 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று எம்.எல்.ஏவாக தேர்வானார்.
அதன்பின் 2016 மற்றும் 2021 தேர்தல்களில் அவருக்கு சீட் வழங்கப்படவில்லை. 2026 தேர்தலிலும் வாய்ப்பு கிடைக்காத நிலையில், கடந்த மார்ச் மாதம் செங்கோட்டையனை சந்தித்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். பின்னர் தவெக சார்பில் சோழவந்தான் (தனி) தொகுதியில் போட்டியிட விஜய் வாய்ப்பு வழங்கினார். அந்த தேர்தலில் வெற்றி பெற்று தற்போது எம்.எல்.ஏவாக உள்ள அவர், தற்காலிக சபாநாயகர் பொறுப்பையும் ஏற்றுள்ளார்.
Read more: முதலமைச்சரான பிறகு முதல் விசிட்.. பெரியார் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய விஜய்..!



