அதிமுக முன்னாள் அமைச்சரும், ஈரோடு மேற்கு தொகுதியின் முன்னாள் எம்எல்ஏவுமான கே.வி. ராமலிங்கம் தற்போது தவெகவில் இணைந்துள்ளார். அதிமுகவில் ஏற்கனவே உள்கட்சி மோதல் நிழவி வரும் சூழலில் இந்த மாற்றம் அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் பொதுப்பணித் துறை அமைச்சராக பதவி வகித்த கே.வி. ராமலிங்கம், ஈரோடு மேற்கு தொகுதியில் தொடர்ந்து 10 ஆண்டுகள் எம்எல்ஏவாக இருந்தவர். கடந்த 2021 சட்டசபை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட அவர், திமுக வேட்பாளர் முத்துசாமியிடம் தோல்வியடைந்தார்.
அதிமுகவில் ஈரோடு மேற்கு மாவட்டச் செயலாளராகவும் செயல்பட்டு வந்த ராமலிங்கம், சமீபகாலமாக கட்சிக்குள் ஏற்பட்ட மாற்றங்களால் அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக, எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகப் பொறுப்புகளில் மாற்றங்கள் செய்யப்பட்ட நிலையில், கே.வி. ராமலிங்கத்தின் பதவியும் பறிக்கப்பட்டது.
இதையடுத்து அதிமுகவில் இருந்து விலகிய அவர், தற்போது தவெகவில் இணைந்திருப்பது அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளது. குறிப்பாக, திருச்சி கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ள சூழலில், எதிர்க்கட்சிகளில் இருந்து மேலும் பல முக்கிய நிர்வாகிகள் தவெகவில் இணைய வாய்ப்பு இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், சட்டசபை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், அமைச்சர் செங்கோட்டையன் ஈரோடு மாவட்டத்திற்கு வந்தார். அவருக்கு கோவை விமான நிலையத்தில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதிமுகவில் தொடர்ந்து உருவாகி வரும் உள்கட்சி அதிருப்தி மற்றும் நிர்வாக மாற்றங்கள் காரணமாக, அடுத்தடுத்த அரசியல் நகர்வுகள் குறித்து தமிழக அரசியல் வட்டாரங்களில் தீவிர கவனம் திரும்பியுள்ளது.
Read more: கடன் வலையில் சிக்காமல் இருக்க.. உங்கள் கிரெடிட் கார்டை இப்படிப் பயன்படுத்துங்கள்..!



