நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் விஜய்யின் தவெக 108 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.. எனினும் ஆட்சியமைக்க போதுமான பெரும்பான்மை கிடைக்காததால் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய காங்கிரஸ் தவெகவுக்கு ஆதரவு வழங்கியது.
இதை தொடர்ந்து திமுக கூட்டணியில் இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விசிக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகள் வெளியில் இருந்து ஆதரவு வழங்கியதால் தவெக ஆட்சி அமைத்தது. மேலும் சட்டப்பேரவையில் தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் விஜய் வெற்றி பெற்றார்.. தவெகவுக்கு ஆதரவாக 144 பேர் வாக்களித்ததால் இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக அரசு தப்பியது.
இதற்கிடையே, தவெக ஆட்சியமைப்பதைத் தடுக்க திமுக – அதிமுக இணைந்து மாற்று ஆட்சி அமைக்க முயன்றதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் பரவின. விசிக தலைவர் திருமாவளவன் பெயர் முதலமைச்சராக முன்மொழியப்பட்டதாகவும் கூறப்பட்டது. ஆனால் இந்த தகவல்களை திமுக தரப்பு திட்டவட்டமாக மறுத்தது.
இந்த விவகாரம் தொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த வன்னி அரசு, “திமுக – அதிமுக இணைந்தால் தமிழ்நாட்டிற்கு நன்றாக இருக்கும் என்றே நினைத்தேன். திருமாவளவனை முதல்வராக்க வேண்டும் என்ற முன்னெடுப்பு நல்ல விஷயம். இந்த நேரத்திலாவது அவர் பெயர் முதலமைச்சர் வேட்பாளராக முன்மொழியப்பட்டது வரவேற்கத்தக்கது” என்று தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், “மக்கள் விருப்பத்தை நிறைவேற்றும் பொறுப்பின் அடிப்படையில்தான் தவெக ஆட்சியமைக்க ஆதரவு அளித்தோம். ஆதரவு அளிக்கவில்லை என்றால் எங்களால்தான் ஆளுநர் ஆட்சி வந்தது என்ற விமர்சனம் எழுந்திருக்கும். தவெகவுக்கு வெறும் ஆதரவு மட்டும் தராமல், துணை முதலமைச்சர் பதவியைக் கேளுங்கள் என்றும் கூறினோம்” எனத் தெரிவித்துள்ளார்.
அதோடு, “திமுக – அதிமுக இணைப்புக்காக இதற்கு முன்பும் பல முயற்சிகள் நடந்துள்ளன. தமிழ்நாட்டில் திமுகவும் அதிமுகவும் வலிமையாக இருப்பது நல்லது. அந்த அடிப்படையிலும் இந்த இணைப்பை வரவேற்கலாம்” என அவர் கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
Read more: அம்மா உணவகங்களை புதுப்பித்து தரமான உணவுகளை வழங்க முதலமைச்சர் விஜய் உத்தரவு..! – புதிய அரசாணை



