சென்னை எம்.ஆர்.சி. நகரில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ். பி. வேலுமணி, தவெக அரசுக்கு ஆதரவு அளித்ததற்காக அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என தாங்கள் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை என்று விளக்கம் அளித்துள்ளார்.
அப்போது பேசிய அவர், “ஏமாற்றம், ஏமாற்றம் என சிலர் திட்டமிட்டு பேசுகின்றனர். தவெகவுக்கு ஆதரவு தான் என்பதை தெளிவுபடுத்தினோம். ஆனால் அமைச்சரவையில் இடம் பெறுவோம் என்று நாங்கள் ஒருமுறை கூட கூறவில்லை. சமூக வலைதளங்களில் சிலர் தொடர்ந்து அவதூறு பரப்பி வருகின்றனர். பதவி ஆசைக்காக தவெகவுக்கு ஆதரவு தரவில்லை. திமுக எதிர்ப்பு என்பதற்காகவே தவெகவுக்கு ஆதரவு அளித்தோம். புதிய அமைச்சர்களாக பொறுப்பேற்றுள்ளவர்களுக்கு வாழ்த்துகள்” என்று தெரிவித்தார்.
மேலும், தற்போது தங்களின் முக்கிய நோக்கம் அதிமுக பொதுக்குழுவைக் கூட்டி தேர்தல் தோல்வி குறித்து விவாதிப்பதே என்றும் அவர் கூறினார். அதேசமயம், தங்களை மீண்டும் சமாதானப்படுத்தும் நோக்கில் எடப்பாடி கே. பழனிசாமி தரப்பில் இருந்து தூதுவர்கள் மூலம் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தவெக அரசுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளித்த பின்னரும் அமைச்சரவையில் இடம் கிடைக்காதது, மறுபுறம் அதிமுக கொறடா உத்தரவை மீறியதாக ஒழுங்கு நடவடிக்கை அச்சுறுத்தல் எழுந்திருப்பது ஆகிய காரணங்களால் வேலுமணி தரப்பு எம்.எல்.ஏ-க்கள் தற்போது அரசியல் நெருக்கடியில் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இதனால், அமைச்சரவை வாய்ப்பு கிடைக்காத நிலையில் அதிருப்தியடைந்த எம்.எல்.ஏ-க்கள் மீண்டும் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையிலான அதிமுகவுடன் சமரசம் செய்யும் முயற்சிகள் திரைமறைவில் தீவிரமாக நடைபெற்று வருவதாக தமிழக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.



