தமிழக அரசியலில் தற்போது அதிமுக சந்தித்து வரும் தொடர் பின்னடைவுகள் பெரும் விவாதமாக மாறியுள்ளன. குறிப்பாக, அதிமுக எம்.எல்.ஏக்கள் தொடர்ந்து ராஜினாமா செய்து தமிழக வெற்றிக் கழக கட்சியில் இணைந்து வருவது, ஆளும் தரப்பிற்கு சட்டசபையில் கூடுதல் பலத்தை ஏற்படுத்தி வருவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
2026 சட்டசபைத் தேர்தலில் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெற முடியாமல் போனதே அதிமுகவிற்கு பெரிய அதிர்ச்சியாக அமைந்திருந்த நிலையில், தற்போது கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் விலகி வருவது அந்த கட்சியின் உள்கட்டமைப்பை மேலும் பலவீனப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கட்சியை மீண்டும் ஒருங்கிணைக்க முயற்சிகள் நடைபெற்று வந்தாலும், அடிப்படை மட்டத்தில் அதிமுக கட்டுப்பாட்டை இழந்து வருவதை இந்த அரசியல் மாற்றங்கள் வெளிப்படையாக காட்டுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக மாவட்ட அளவிலான நிர்வாகிகள் மற்றும் தனிப்பட்ட செல்வாக்கு கொண்ட தலைவர்கள் மத்தியில் அதிருப்தி அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.
மேலும், எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.வி.சண்முகம் ஆதரவாளர்கள் என அறியப்படும் சில முக்கிய மாவட்ட செயலாளர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகளும் அடுத்த கட்டமாக தவெகவில் இணையலாம் என்ற பேச்சு அரசியல் வட்டாரங்களில் தீவிரமாக பேசப்பட்டு வருகிறது.
இசக்கி சுப்பையா விலகலைத் தொடர்ந்து, “அடுத்ததாக யார்?” என்ற கேள்வி அதிமுகவினரிடையே எழுந்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிருப்தியில் இருக்கும் சில எம்.எல்.ஏக்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் தற்போது தவெக தரப்பின் அரசியல் சைகைக்காக காத்திருக்கிறார்கள் என்ற தகவல்களும் வெளியாகி வருகின்றன.
இதனால், வரும் நாட்களில் மேலும் சில அதிரடி அரசியல் மாற்றங்கள் நடைபெறலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. தொடர்ந்து முக்கிய தலைவர்கள் விலகி வருவது, எதிர்காலத்தில் அதிமுகவை வலுவான எதிர்க்கட்சியாக கூட நிலைநிறுத்த முடியாத சூழலை உருவாக்கக்கூடும் என அரசியல் பார்வையாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அதேநேரத்தில், விஜய் தலைமையிலான தவெக கட்சியின் வளர்ச்சி, இளைஞர்கள் மத்தியில் உருவாகியிருக்கும் வரவேற்பு மற்றும் ஆளுங்கட்சியின் அதிகார பலம் ஆகியவை அதிமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்களை ஈர்த்து வருவதாகவும் கூறப்படுகிறது.



