இளைஞர் அஜித் படுகொலை வழக்கிலிருந்து, காவல்துறை உயர் அதிகாரிகளைக் காப்பாற்ற திமுக அரசு முயற்சிக்கிறதா..? என அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள மடப்புரத்தைச் சேர்ந்தவர் அஜித்குமார் (27). அங்குள்ள பத்ரகாளியம்மன் கோயிலில் தனியார் நிறுவன ஒப்பந்த காவலாளியாக பணிபுரிந்தார். இவரை ஜூன் 27-ம் தேதி திருட்டு வழக்கு தொடர்பாக மானாமதுரை உட்கோட்ட தனிப்படை போலீஸார் அழைத்துச் சென்றனர். போலீஸார் தாக்கியதில் ஜூன் 28-ம் தேதி அஜித்குமார் உயிரிழந்தார்.
இதனிடையே இச்சம்பவம் குறித்து திருப்புவனம் போலீஸார் பிஎன்எஸ்எஸ் 190 (2) (ஏ) பிரிவின் கீழ் வழக்குப் பதிந்து நீதித்துறை விசாரணைக்கு அனுப்பப்பட்டது. இதனிடையே தனிப்படை காவலர்கள் பிரபு, கண்ணன், சங்கரமணிகண்டன், ராஜா, ஆனந்த், ராமச்சந்திரன் ஆகிய 6 பேரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் பணியிடை நீக்கம் செய்தார். இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றம் செய்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இளைஞர் அஜித் படுகொலை வழக்கிலிருந்து, காவல்துறை உயர் அதிகாரிகளைக் காப்பாற்ற திமுக அரசு முயற்சிக்கிறதா..? என அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.
இதுகுறித்து பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில்; சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் காவல் நிலையத்தில் வைத்து, இளைஞர் அஜித்குமார் அடித்துக் கொலை செய்யப்பட்டது தொடர்பான காணொளி வெளியாகியுள்ளது. இது தொடர்பான வழக்கில், சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு, திமுக அரசுக்கு பல கேள்விகளை எழுப்பியுள்ளது. குறிப்பாக, மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் ஆசிஷ் ராவத்தை, அவசர அவசரமாகக் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றியது குறித்துக் கடுமையான கேள்வி எழுப்பியுள்ளது நீதிமன்றம்.
இளைஞர் அஜித் குமாரை, முதல் தகவல் அறிக்கை கூடப் பதியாமல், தனிப் படை எப்படி விசாரித்தது? ராமநாதபுரம் சரக காவல்துறை உயர் அதிகாரிகள் அனுமதி கொடுத்தார்களா? அல்லது அவர்ககளுக்குத் தெரியாமல், தனிப்படை விசாரித்ததா..? அப்படியானால், சரக காவல்துறை, உயர் அதிகாரிகள் கட்டுப்பாட்டில் இல்லையா..? ஊராட்சித் தலைவரின் கணவரான திமுகவைச் சேர்ந்த சேங்கைமாறன், திமுகவைச் சேர்ந்த மகேந்திரன், திருப்புவனம் திமுக நகரச் செயலாளர் காளீஸ்வரன் ஆகியோருடன், மானாமதுரை டிஎஸ்பியும் சேர்ந்து, உயிரிழந்த அஜித்குமார் குடும்பத்தினருடன் பேரம் பேச முற்பட்டது காவல்துறை உயர் அதிகாரிகள் அனுமதி இல்லாமலா..?
மானாமதுரை துணைக் காவல் கண்காணிப்பாளர் சண்முகசுந்தரம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஆனால், மாவட்டக் கண்காணிப்பாளர் ஆசிஷ் ராவத் மற்றும் ராமநாதபுரம் சரக காவல்துறை டி.ஐ.ஜி. மூர்த்தி ஆகியோர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை ஏன்..? இளைஞர் அஜித் படுகொலை வழக்கிலிருந்து, காவல்துறை உயர் அதிகாரிகளைக் காப்பாற்ற திமுக அரசு முயற்சிக்கிறதா..?
இளைஞர் அஜித்குமாரை, சீருடை அணியாத சிலர், கடுமையாகத் தாக்கும் காணொளியைப் பார்க்கவே மனம் பதைபதைக்கிறது. இனி காவல்துறையினர் மீது பொதுமக்களுக்கு எப்படி நம்பிக்கை வரும்..? இந்த வழக்கு தொடர்பாக, ராமநாதபுரம் சரக காவல்துறை துணைத் தலைவர் மூர்த்தி, சிவகங்கை மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் ஆசிஷ் ராவத் உள்ளிட்ட காவல்துறை உயர் அதிகாரிகளும் விசாரணைக்கு உள்ளாக்கப்பட வேண்டும். சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு கூறியிருப்பதைப் போல, அவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட வேண்டும்.கண்துடைப்புக்காகப் பணிமாற்றம் செய்து மக்களை ஏமாற்றி விடலாம் என்று திமுக அரசு நினைத்தால், அந்த எண்ணத்தை மாற்றிக் கொள்வது நல்லது என தெரிவித்துள்ளார்.