செங்கல்பட்டு அருகே ஜிஎஸ்டி சாலையில் சென்னை நோக்கி வந்த 2 லாரிகள் அடுத்தடுத்து மோதி சாலையோர பள்ளத்தில் உருண்டு விழுந்தன. இதில், லாரிகளை ஓட்டிவந்த 2 ஓட்டுநர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
செங்கல்பட்டு அருகே பழவேலி பகுதி ஜிஎஸ்டி சாலையில், திருச்சி – சென்னை செல்லும் மார்க்கத்தில் இன்று அதிகாலை காலி பீர்பாட்டில்களை ஏற்றிக்கொண்டு சென்னை நோக்கி ஒரு லாரி வந்து கொண்டிருந்தது. அப்போது, அந்த லாரியின் பின் வாழைப்பழ தார்களோடு மற்றொரு லாரி வந்தது. இதில், காலி பீர்பாட்டில் ஏற்றி வந்த டிரைவர் கண்ணன், பழவேலி பகுதியில் சாப்பிடுவதற்காக சாலையோரத்தில் லாரியை ஓரங்கட்ட முயற்சித்துள்ளார்.
அப்போது வாழைத்தார் ஏற்றி வந்த டிரைவர் சந்தோஷின் கட்டுப்பாட்டை இழந்த மற்றொரு லாரி, காலி பீர்பாட்டில் ஏற்றிவந்த லாரியின் மீது வேகமாக மோதியது. இதில், இரண்டு லாரிகளுமே சாலையோர பள்ளத்தில் உருண்டு கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. கண்ணன் ஓட்டிவந்த லாரியில் இருந்த காலி பீர்பாட்டில்கள் சாலையில் உருண்டு உடைந்து சிதறின.
இந்த விபத்தில் ஓட்டுநர்கள் கண்ணன், சந்தோஷ் ஆகிய இருவரும் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதனால் அங்கு சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்ததும், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், போக்குவரத்தை சீரமைத்து விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.