தற்போதைய அரசியல் சூழலில் இந்திய அரசியலில் பாஜக ஒரு மிகப்பெரிய சக்தியாக விளங்குகிறது. அந்த சக்தியை எதிர்க்க திராணி இல்லாமல் தான் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து, பல்வேறு மாநில கட்சிகளுடன் கைகோர்த்து இந்தியா என்ற புதிய கூட்டணியை ஏற்படுத்தி இருக்கின்றன.
சிறு வயது முதலே அரசியல் சாணக்கிராக இருந்து வரும் பிரதமர் நரேந்திரமோடியை இந்த கூட்டணி வீழ்த்தி, வெற்றி பெறுமா? என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆனால் தேசிய அளவில் பாஜக தற்போது மிகப்பெரிய சக்தியாக இருந்து வருகிறது. அந்த கட்சியை அவ்வளவு எளிதில் யாராலும் நெருங்கி விட முடியாது என்ற அளவிற்கு அந்த கட்சியின் போக்கு இருக்கிறது.
போதாக்குறைக்கு தமிழகத்தில் பாஜக வளரவே முடியாது என்று தெரிவித்த காலமெல்லாம் மலையேறிப் போய்விட்டது. தற்போது அண்ணாமலை தலைமையில், தமிழகத்தில் பாஜக மெல்ல, மெல்ல தவிர்க்க முடியாத சக்தியாக வளர்ந்து வருகிறது.
இந்த நிலையில் தான், சில ஆண்டுகளுக்கு முன்னர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட அன்வர் ராஜா, தற்போது அதிமுகவின் பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளார்.
இந்த சூழ்நிலையில் சென்னை பசுமைவழிச் சாலை பகுதியில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த அன்வர் ராஜா, கட்சியிலிருந்து நீக்கப்பட்டாலும் சென்ற ஒரு வருட காலமாக கட்சிப் பணியை செய்து கொண்டு தான் இருந்தேன். கட்சி உறுப்பினர்களின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுக் கொண்டேன். என்னை யாரும் தடுக்கவில்லை என்று கூறி இருக்கிறார்.
மேலும் பேசிய அவர், எல்லாருடனும் ஒத்து வாழ்பவனே உயிர் வாழ்பவன் மற்றவர் இறந்தவர்களுள் வைக்கப்படுவார்கள் என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி பேசியுள்ளார். அதிமுக மிகப்பெரிய இயக்கம், ஆனால் ஒரு சிறிய சறுக்கலில் இருந்து மீண்டு வந்து மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளேன். கட்சியின் கொள்கைகளுக்கு உட்பட்டு கட்சியின் வளர்ச்சிக்கு மறுபடியும் களப்பணி ஆற்ற விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
அதோடு, ஒரு கட்சியை மற்றொரு கட்சி விமர்சனம் செய்வது என்பது வேறு, கூட்டணி என்பது வேறு இந்தியாவை பொறுத்தவரையில் காங்கிரஸ் கட்சியை தவிர்த்து, மற்ற அனைத்து கட்சிகளுமே பாஜகவுடன் கூட்டணி வைத்திருக்கின்றன என்று அவர் குறிப்பிட்டு பேசியிருக்கிறார்.