சார்ஜ் போடப்பட்ட செல்போனை பக்கத்தில் வைத்துக் கொண்டு தூங்காதீர்கள்’ என அதன் பாதக அம்சங்களை பிரபல ஐபோன் தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தூக்கம் வரும் வரை செல்போனை பார்த்துவிட்டு எடுக்க வசதி என படுக்கையிலோ அல்லது படுக்கைக்கு அருகிலேயோ வைத்து விட்டு தூங்க செல்கிறோம். அவ்வாறு படுக்கை மற்றும் படுக்கைக்கு அருகில் செல்போனை சார்ஜில் போடும் போது, எளிதில் தீ விபத்து ஏற்படலாம். அத்துடன் உடற்காயங்கள், மின்சார தாக்குதல்கள் உட்பட பல்வேறு அபாயங்கள் ஏற்படலாம் என ஆப்பிள் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தவிர்த்து படுக்கையில் சார்ஜில் போடப்பட்ட செல்போன் மீது நாம் புரண்டு தூங்கும் போதோ, தலையணை மற்றும் விரிப்பின் கீழாக செல்போனை சார்ஜில் வைப்பதாலோ, பாதிப்புகள் அதிகம் .
செல்போனை சார்ஜில் போடும் போது அதனை ஜன்னலுக்கு அருகில் என காற்றோட்டமான இடத்தில் வைத்தே அவற்றை செயல்படுத்த வேண்டும் என ஆப்பிள் அறிவுறுத்தியுள்ளது. மேலும், சார்ஜிங் அடாப்டர்கள் மற்றும் கேபிள் உட்பட சகலத்தையும் அதிகாரபூர்வ நிறுவனத்திடம் இருந்து வாங்குவதே சிறந்தது. போலிகளை தவிர்த்து விட வேண்டும். இந்த அறிவிப்புக்கள், எச்சரிக்கைகள், பயன்பாடுகள் அனைத்தும் ஐபோன் பயன்படுத்துபவர்களுக்கு மட்டுமல்ல அனைத்து வகையான மொபைல் போன் உபயோகிப்பாளர்களுக்கும் தான். அத்துடன் மொபைல் திரையில் இருந்து வெளிப்படும் நீலக்கதிர்கள், உடலின் தூக்கத்துக்கு காரணமான மெலட்டோனின் ஹார்மோன் சுரப்பை தடுத்து நிறுத்தி விடும் . இதனால் உடல் ஆரோக்கியத்துக்கு ஊறுவிளைவிக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.