மின்சார மீட்டருக்கான வாடகை கட்டணத்தை மக்கள் மீது திணிப்பது நியாயமல்ல என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழ்நாட்டில் மின்சாரக் கட்டணத்தை உயர்த்த முடிவு செய்துள்ள தமிழ்நாடு அரசு, அத்துடன் மின்சார மீட்டருக்கு வாடகை வசூலிக்கவும் தீர்மானித்துள்ளது. நகர்ப்புற வீடுகளில் இப்போதிருக்கும் டிஜிட்டல் மீட்டர்களுக்கு இரு மாதங்களுக்கு ரூ.120 வீதமும், இனி பொருத்தப்படவுள்ள ஸ்மார்ட் மீட்டர்களுக்கு ரூ.350 வீதமும் வாடகை வசூலிக்கப்படவுள்ளது. இது மக்கள் மீதான பொருளாதார தாக்குதல் ஆகும்.
மின்சாரக் கட்டண உயர்வு குறித்த அறிவிப்பை கடந்த 18-ஆம் தேதி வெளியிட்ட மின்துறை அமைச்சர், ஒருபுறம் மின் கட்டணம் குறைந்த அளவில் உயர்த்தப்படும் நிலையில், மறுபுறம் நுகர்வோரிடம் இதுவரை வசூலிக்கப்பட்டு வந்த ரூ. 50 வரையிலான நிலைக்கட்டணம் ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார். திமுக தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்டிருந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்திருந்தார். ரூ.50 கட்டணத்தை ரத்து செய்ததை கொண்டாட்டமாக அறிவித்து விட்டு, யாருக்கும் தெரியாமல் ரூ.350 கட்டணத்தை மக்கள் மீது திணிப்பது நியாயமல்ல.
தமிழ்நாட்டில் இதுவரை மின்சார மீட்டருக்கு வாடகை வசூலிக்கப்பட்டதில்லை. ஆனால், தமிழ்நாடு மின்சார வினியோக விதி 5(11)-இன்படி மீட்டருக்கு வாடகை வசூலிக்கப்படவிருப்பதாக மின்வாரியம் அறிவித்துள்ளது. இந்த விதிகள் 2004-ஆம் ஆண்டில் வகுக்கப்பட்டாலும் கூட, மின்சார மீட்டருக்கு வாடகை வசூலிக்க முடியும் என்று எந்த விதியிலும் நேரடியாக தெரிவிக்கப்படவில்லை. அதுமட்டுமின்றி, மின்சாரம் வழங்குவது மின்சார வாரியத்தின் சேவை. ஒவ்வொரு வீட்டிலும் எவ்வளவு மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது என்பதைக் கணக்கிட வேண்டியது மின்சார வாரியத்தின் பணி. அதற்கான செலவுகளை மின்சார வாரியம் தான் ஏற்றுக்கொள்ள வேண்டுமே தவிர மக்கள் மீது சுமத்தக்கூடாது என தெரிவித்துள்ளார்.